Tuesday, January 20, 2009

10. உயில்

முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தார் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் (1657 - 1707).

வயது தொண்ணூறு. இத்தனை வருடங்கள் போர் போர் என்று ஓடிவிட்டது. இந்தியா முழுவதும் கட்டியாள வேண்டும் என்ற பெருங்கனவில் பெரும் பகுதி நிறைவேறிவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி. சில வருடங்களில் அவற்றையும் பிடித்துவிடலாம்.

என்ன செய்ய? முதுமை ஆட்கொண்டுவிட்டது. உடல் ஒத்துழைக்கவில்லை. மரணத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தனக்குப்பின் தன் வாரிசுகள், இந்தப் பேரரசைகட்டிக்காப்பார்களா? பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள், ஆக்கிரமிப்புகள். கிட்டத்தட்ட நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று எவ்வளவே பரந்து விரிந்திருக்கிறது. நிலைக்குமா? கவலை, அவரது சுருங்கிய கன்னங்களில் சுடத் தெரிந்தது.

தான் மாட்டிக் கொண்டது போல, தனக்குச் சகோதரர்களுடன் நேர்ந்தது போல வாரிசுரிமைப் போர், தன் மகன்களுக்கு இடையேயும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தார். ஆட்சிப் பகுதிகளைப் பரித்துக் கொடுத்து உயில் எழுதி வைத்தார்.

'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச்சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்றுச் சேர்த்த பணத்தில் கொஞ்சம் அஜ்யா பேக்கிடம் இருக்கிறது. அந்தப் பணத்தை கொண்டு என் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

தன்னைக் காண வந்த மகன் பகதூர் ஷாவிடம் மனம் விட்டுப் பேசினார்.

'நான் உலகத்துக்குத் தனியாக வந்தேன். இந்த உலகத்தை விட்டு வேற்று மனிதனாகப் போகப்போகின்றேன். நான் யார் என்று என்னால் இதுவரை உணர முடியவில்லை. இங்கு வந்து என்ன செய்தேன் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நிறையப் பாவங்களை செய்துள்ளேன். எனக்காக என்னென்ன தண்டனைகள் காத்திருக்கின்றன என்று தெரியவில்லை.'

1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

ஒளரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப் பெரிய பேரரசை கவனிக்க அவருக்குத் திறமையில்லை. ஒளரங்கசீப் காலத்திலேயே, கொஞ்சகொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர்.

ஒளரங்கசீப் மறைந்த நூறாண்டுகளுக்குள்ளாகவே முகலாயப் பேரரசு முகவரியின்றிப் போனது. இருந்த கொஞ்சநஞ்ச முகலாய ஆட்சியாளாகளும் மராட்டியர்களின் கைப்பொம்மையாக இருந்தனர்.
அப்போது இந்தியாவில் தன் முத்திரையைப் பதிக்க பலமாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தது பிரிட்டனில் இருந்து வந்த கிழக்கிந்திய கம்பெனி.

9. ஒளரங்கசீப் எப்படிப்பட்டவர்?

முகலாய முதல் பேரரசர் பாபர், சிறந்த பாடகர். ஹூமாயூன் என்ற ஒரு சிறைக்கைதியின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்டு, அவரையே தன் அரசவைப் பாடகராக்கிக் கொண்டார்.

அக்பருக்கு இசையில் ஆர்வம் மிக அதிகம். அவரது அவையிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட சிறந்த இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் தான்சேன் குறிப்பிடத்தக்கவர்.

ஷாஜஹான் மிகவும் இனிமையாகப் பாடக்கூடியவர். சரி, ஒளரங்கசீப்?

முதலில் ஒளரங்கசீப் அவையிலும் இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் இருந்தனர். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பதினோராவது ஆண்டிலிருந்து அவற்றுக்குத் தடைவிதித்தார். இஸ்லாம் மத நெறிகளின் படி இசை, ஆடல், நடனம் போன்ற சிற்றின்பங்கள் கூடாது. ஒளரங்கசீப்பும் அதைத்தான் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

அவரது அவையில் இசைக்கலைஞர்களோ, நடனக் கலைஞர்களோ இடம் பெறவில்லை. முந்தைய காலத்தில் அவையில் இடம் பெற்றிருந்த கலைஞர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கி உதவினார்.

முகலாயப் பேரரசின் கீழ்வரும் எந்த மன்னரும், பிரபுக்களும் இது போன்ற கேளிக்கைளில் ஈடுபடக் கூடாது என்று கட்டளை போட்டவர் ஒளரங்கசீப்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் உண்டு. ஒளரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவர்.

ஒளரங்கசீப் தன் வாழ்வில் பாதிக்கும் மேல் போர்களங்களிலேயே கழித்திருக்கிறார். ஆனால், எப்பேர்பட்ட போர்களத்தில் இருந்த போதும் தொழுகை வேளையில் அதை செய்யத் தவறியதில்லை. போர் நடக்கும் இடத்திலேயே, ஒரு ஓரமாக தன் தொழுகையை முடித்துவிட்டு, பின் தாக்குதலைத் தொடர்வார்.

மற்றபடி, அரண்மனையில் அவர் இருக்கும் நாள்களிலும் தொழுகைக்கான நேரங்களை பொருத்து மற்ற வேளைகளை அமைத்துக் கொண்டார். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் ஒளரங்கசீப், முதல் தொழுகையான ஃபஜரை முடிப்பார். பின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களை வாசிப்பார்.

ஏழு மணிக்குப்பின் காலை உணவை முடிப்பார். ஏழரைக்குள் அரசவைக்கு வந்துவிடுவார். வழக்குகளை விசாரிப்பார். உண்மைகளை ஆராய்வார். அதற்குப் பின் குர்ஆனின் படி தீர்ப்புகளை வழங்குவார்.

எட்டரை மணிக்கு மேல் அரண்மனை மாடத்தில் வந்து நிற்பார். அங்கிருந்து நோக்கினால் எமுனை நதியின் அழகை ரசிக்கலாம். ஒளரங்கசீப்பை பார்ப்பதற்காக நதியின் கரையில் மக்கள் திரண்டு நிற்ப்பர்.

(அரண்மனை மாடத்திலிருந்து அரசர்கள் மக்களுக்குக் காட்சித்தருவதென்பது ஒரு வழக்கம் ஆனால் இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்பதால், அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டார் ஒளரங்கசீப்).

அதற்குப்பின் வீரர்களின் போர்ப் பயிற்சியை பார்வையிடுவார். யானைச் சண்டையைப் பார்த்து ரசிப்பார். இந்த நேரத்தில் ஒவ்வொரு வெள்ளியன்றும் டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

காலை ஒன்பது மணியிலிருந்து, பதினோரு மணி வரை அரசவை சிம்மாசனத்தில் அமர்ந்து மக்கள் பணிகளை கவனிப்பார். அதற்குப்பின் தனிப்பட்ட விருந்தினர்களையும், பிற ஆட்சியாளர்களையும், வெளி மன்னர்களையும் சந்திப்பதற்கு நேரம் கொடுத்திருப்பார்.

ஒளரங்கசீப்புக்கு ஒவ்வொரு மாகாணத்தின் அதிகாரிகளிடமிருந்து வரும் கடிதங்கள் செய்தி வாசித்துக் காண்பிக்கப்படும்.அவற்றுக்கான பதில்களை ஒளரங்கசீப் அளிப்பார். உடனுக்குடன் கடிதம் எழுதப்படும். சிலக் குறிப்பிட்ட கடிதங்களுக்கு மட்டும் ஒளரங்கசீப்பே தன் கைப்பட பதில் எழுதுவார்.

பனிரெண்டு மணிக்கு மதிய உணவு சாப்பிடுவார். பின் ஓய்வு.

மதியம் இரண்டு மணி என்பது லுஹர் தொழுகைக்கான நேரம்.

இரண்டரை மணிக்கு மீண்டும் அரசாங்கப்பணிகளைச் செய்வார். முடித்த பின் அஸர் தொழுகை.

ஐந்தரை மணிக்கு விருந்தினர்களின் மாஜயாதையை ஏற்றுக் கொள்வார். பின் மக்ரிப் தொழுகை. அந்தத் தொழுகை முடிந்ததும் திவானி-இ-காஸ் அவைக்குச் செல்வார். அங்கு சிறிது நேரம் பணியாற்றுவார்.

ஏழரை மணிக்குச் சபையைக் கலைப்பார். இஷா தொழுகையை மேற்கொள்வார்.

எட்டு மணிக்குச் இரவு உணவு. பின் இஸ்லாம் மார்க்க தியானத்தில் ஈடுபடுவார். புத்தகங்களை வாசிப்பார். பின்பு றங்கச் செல்வார்.

இவை தான் ஒளரங்கசீப்பின் அன்றாட நடவடிக்கைகள். இவை சில நாள்கள் மட்டும் அவசர காரியத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக வெள்ளிக்கிழமையன்று நீதி வசாரணை கிடையாது.

ஒளரங்கசீப், இருபத்து நான்கு மணிநேரத்தில் மூன்று மணி நேரமே உறங்கினார். வேலை தவிர மீதமிருந்த ஓய்வு நேரங்களில் எல்லாம் இஸ்லாமிய மார்க்க நூல்களைப் படிப்பதில் செலவிட்டார். தரையில் தான் படுப்பார். ஒளரங்கசீப் மாமிசம் உண்ணாதவர். கொரின்தா என்ற புளிப்புச் சுவை நிறைந்த பழத்தை விரும்பிச் சாப்பிடுவார்.

அரசாங்க கஜானா பணமானது மக்களுக்கே உரியது, அரசு குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில் ஒளரங்கசீப் மிகவும் உறுதியாக இருந்தார். தன் சொந்தச் செலவுகளுக்கா ஒரு போதும் அவர் கஜானாவை உபயோகிக்க மாட்டார்.

பொதுவாக மன்னர்கள் தன் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்குக் காட்சி கொடுப்பதைப் பாரம்பர்யமாக வைத்திருந்தார்கள். ஆனால் எளிமை விரும்பியான ஒளரங்கசீப், தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும் சாதாரண தினமாகவே எடுத்துக் கொண்டார்.

ஒளரங்கசீப்புக்குக் குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்ஆனை தன் கைப்பட எழுதுவதில் அதீத விருப்பம் இருந்தது. அந்த இரண்டையும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் தன் தனிப்பட்ட செலவுகளைப் பார்த்துக் கொண்டார்.

மதுவை வெறுத்தவர். தன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுவைத் தடை செய்தார். அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார். உல்லாச நிகழச்சிகள் நடத்தக் கூடாதென்று உத்தரவிட்டார். போதைப் பொருள்களையும் ஒழித்தார்.

இறந்த கணவனின் சடலத்தை வைத்து எரிக்கும்போதே, அதே நெருப்பில் மனைவியும் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் ஹிந்துக்களிடையே அதிகமாக இருந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்றழைக்கப்பட்டது.

ஒருமுறை போர்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவனது மனைவியை அந்த நெருப்பில் குதிக்கச் சொல்லி சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒளரங்கசீப் அங்கு வந்தார். அந்த செயலைத் தடுத்தார். அங்கிருந்தவர்கள், தங்கள் மத விஷயத்தில் தலையிடக் கூடாதென்று வாதம் செய்தனர்.

ஆனால் ஒளரங்கசீப் விடவில்லை. 'இது அநயாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக் கூடாது. இந்தச் சம்பிரதாயத்தைத் தடை செய்கிறேன்' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காகப் பல்வேறு பிரிவினர்களிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்தச் சட்டத்தை செயல்படுத்த முடிந்தது.

நௌரோஸ் (Navroz) என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமையமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்தத்திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்குச் சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.
வீணாக அரசாங்கப்பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத ஒளரங்கசீப் நௌரோஸ் பண்டிகையை தடைச் செய்தார்.

8. ஆட்சி எப்படிப்பட்டது?

'ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு'.

ஒளரங்கசீப்பின் லட்சியமாக இருந்தது இதுதான். இந்தியா முழுவதும் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும். இஸ்லாமியச் சட்டப்படி (ஷரீயத்) ஆட்சி நடத்த வேண்டும் என்பதே ஒளரங்கசீப்பின் எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காககத் தான் போராடிக்கொண்டிருந்தார்.

தன் லட்சியத்தை நிறைவேற்ற ஒளரங்கசீப் பிற மதத்தினர்களைக் கொடுமைப்படுத்தினார். ஹிந்துக்கள் மீது அதிக வரிகளை விதித்தார், அவர் ஆட்சியில் இஸ்லாமியர்களைத் தவிர மற்ற மதத்தினர் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர், அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவருடைய ஆட்சியில் தான் ஏராளமான ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இவையெல்லாம் ஒளரங்கசீப் ஆட்சிக் காலம் பற்றிப் பொதுவாகக் கூறப்படும் செய்திகள்.

ஒளரங்கசீப் ஆட்சியில் சில புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும், நடைமுறையில் இருந்த சில வரிகள் நீக்கப்பட்டன என்பதே உண்மை.

ஹிந்துக்கள் தீபாவளியின் போது வீடுகளில், வீதிகளில், கோயில்களில் வரிசையாக விளக்குகளை ஏற்றுவர். அதே போல, முஹர்ரம் பண்டிகையின் போது தீபங்கள் ஏற்றுவது முஸ்லீம்களின் வழக்கமாக இருந்து வந்தது. இந்த தீப அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்றால், தனியாக வரி செலுத்த வேண்டியிருந்தது. ஒளரங்கசீப் அதை ரத்துசெய்தார்.

கங்கை என்பது, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் நதி. அதில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. ஆனால் முகலாயர்கள் ஆட்சியில், கங்கை நதியில் ஹிந்துக்கள் நீராட வரி செலுத்த வேண்டியதிருந்தது. ஒளரங்கசீப் அந்த வரி தேவையில்லை, யார் வேண்டுமானாலும் கங்கையில் நீராடலாம் என்று அறிவித்தார்.

இற்ந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதென்பது ஹிந்துக்களின் சடங்குகளில் ஒன்று. அதற்கும் தனியாக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த வரியும் ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டது.

நதிகளில் மீன்கள் பிடிப்பதற்குக்கூட வரி இருந்தது. பால் கறந்து விற்பதற்கும் வரி, பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரி, காய்கறிகள் விற்பதற்கும் வரி எல்லாமே ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி, காய வைத்தால் அது வரட்டியாகிவிடும். அதை அடுப்பெரிப்பதற்கும், இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்படுத்தி வந்தன். ஆனால் அந்த வரட்டியை உபயோகிப்பதற்குக் கூட தனியாக வரிவிதிக்கப்பட்டிருந்தது. அதுவும் நீக்கப்பட்டது.

இவைப் போக ஒடுக்கப்பட்ட ஹிந்து விதவைப் பெண்களை மறுமணம் செ;துக் கொள்பவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. அதை மாற்றினார் ஒளரங்கசீப். ஹிந்து பண்டிகைகளின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சந்தைகள் போடுவது வழக்கம். அதற்கு வியாபாரிகள் செலுத்த வேண்டிய வரி, ரத்து செய்யப்பட்டது.

இஸ்லாமியப் பேரரசின் கீழ் வாழும் இஸ்லாமியர் அல்லாத மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி, ஜிஸ்யா (Jizya). அதாவது தங்கள் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர் அல்லாத மக்கள் ஜிஸ்யா வரியை செலுத்திவந்தனர். அக்பர் தவிர பிற முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்த ஜிஸ்யா வரி வழக்கத்தில் இருந்தது. அரசின் பாதுகாப்புச் செலவுக்காக வாங்கப்பட்ட இந்த வரியிலிருந்து, முதியோர், பிச்சைக்காரரர்கள், ஊனமுற்றோர், துறவிகள், கிருஸ்தவ குருமார்கள, அந்தணர்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1679-ல் ஒளரங்கசீப் தன் தன் பேரரசு முழுவதும் ஜிஸ்யா வரியினை கொண்டுவந்தார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய பிற மதத்தினர்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை.

வரியைத் தவணை முறையில் செலுத்த மக்கள் அனுமதிக்ப்பட்டனர். பணமாக அன்றி, பொருளாகக் கூட செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. மிகவும் கஷ்டத்தில் இருப்பவருக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் இஸ்லாமியர்கள் ராணுவத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர். 'ராணுவத்தில் சேராமல் வரிகட்டிக்கொள்கிறேன்' என்று கேட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பொதுநிர்வாகம், ராணுவத்தில் பதவிகள் ரேங்க் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மன்ஸப்தாரி முறை என்று அழைக்கப்பட்ட இது பழைய டெல்லி சுல்தான்களும் மங்கோலியர்களும் பின்பற்றி வந்ததாகும். ரேங்க் என்பது 10 முதல் 5000 வரை இருந்தது. 10 என்பது மிகவும் சாதாரண நிலை. 5000 மிகவும் உயரிய பதவிக்குரிய ரேங்க். இந்த ரேங்க் பட்டியலில் வருபவர்கள் மன்ஸப்தார்ஸ் என்று அழைக்கப்பட்டனர். பாபர், அக்பர் காலத்தில் இருந்தே இந்த மனஸப்தாரி முறை கடைபிடிக்கப்பட்டது.

எந்த ரேங்க் கொண்டவரும் நேரடியாக மன்னரின் கீழ் பணியாற்றுபவர்களாகத்தான் அர்த்தம். 5000 ரேங்க் கொண்ட ஒரு மன்ஸப்தார், 1000 ரேங்க கொண்ட இன்னொரு மன்ஸப்தாரை அதிகாரம் செய்ய முடியாது.

இந்த மனஸப்தாரி முறையில் அக்பர் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். முக்கியமாக, ரேங்க் 5000 என்பதை 7000 வரை உயர்த்தினார். ஒளரங்கசீப்பும் அதைக் கடைபிடித்தார். ஒளரங்கசீப் நியமித்தவர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஹிந்து மன்ஸப்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகவும் அதிகமான பகுதிகளை ஆண்ட ஒரே முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் தான். அவர் காலத்தில் தெற்கே தமிழகத்தின் செஞ்சியிலிருந்து* வடக்கே காஷ்மீர் வரையலும் மேற்கே ஆஃப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் முகலாயர்கள் வசம் இருந்தது. கொவா மட்டும் போர்த்துகீசியர்களிடம் இருந்தது.
------------------------------------------------------------------------------------------
* தெற்கே தக்காணபபகுதிகளை எல்லாம் தாண்டி, தமிழகத்துக்குள்ளும் முகலாயப்பேரரசு வேர்விட்டது. சுல்பிகார் கான் என்பவர் ஒளரங்கசீப்பின் தளபதிகளுள் முக்கியமானவர் தக்காணப் போர்கள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பட்டவர்.
------------------------------------------------------------------------------------------
அவர் முகலாயப்படைகளோடு தெற்கு நோக்கி மேலும் மேலும் முன்னேறினார். 1690-ல் செஞ்சிக்கு வந்தார். கோட்டை முற்றுகையிடப்பட்டது. 1698-ல் செஞ்சிக் கோட்டை முகலாயர்கள் வசமானது. அதன் பெயர் நஸரஜ்கட்டா என்று பெயர் மாற்றிவைக்கப்பட்டது.

அதற்குப்பின் ரஜபுத்திர தளபதியான 'சொரூப்சிங்', செஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அத்தனை பெரிய பேரரசரை ஒற்றையாளாக நிர்வகிப்பதென்பது எவ்வளவு பெரிய காரியம். டெல்லியிலோ, ஆக்ராவிலோ இருந்துக்கொண்டே செயல்படுவது சரிபடாது என்று உணர்ந்த ஒளரங்கசீப், பெரும்பாலும் தக்காணப்பகுதிகளில் தன் இருப்பை அமைத்துக்கொண்டார். அதனால் அவர் காலம் வரையிலும் நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் எல்லாம் உண்டாகவில்லை.

பல சமயங்களில் அவரது மகன்களே, ஒளரங்கசிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோல்கொண்டா அரசரோடு நேர்ந்து சதி நடவiடிக்கைகளில் ஈடுபட்ட தன் மகனைப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தவர் ஒளரங்கசிப். பிற மகன்களும் அவ்வப்போது, இம்மாதிரி தண்டனைகளை அனுபவித்திருக்கின்றனர்.

பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள். முகலாயர்களின் எல்லையை விரிவாக்க எத்தனை உயிர்ப் பலிகள். கிட்டதட்ட இந்தியாவே தன் கையில் என்ற நிலையில் அதனைக் கட்டிக் காக்க வேண்டாமா? எவ்வளவு பெரியபொறுப்பு அது. அதனால் தான் நிhவாகத்தில் கடுமையாகவே நடந்துக் கொண்டார் ஒளரங்கசீப்.

பேரரசின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று ஹிந்து கோயில்கள் சம்பந்தப்பட்டது.

'முகலாயப்பேரரசின் ஆளுகைக்குள்பட்ட புராதானக் கோயில்கள் எவற்றையும் அழிக்கக்கூடாது. அதே சமயத்தில் புதிய கோயில்கள் எதையும் இனி கட்டவும் அனுமதி கிடையாது.'

இது தான் ஒளரங்கசீப் போட்ட உத்தரவு தவிர, ஏற்கெனவே இருந்த கோயில்களை இடிக்கச் சொல்லி அவர் கட்டளையிட்டது கிடையாது. ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமை ஒளரங்கசீப் காலத்தில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

சை சமயத்தை பரப்பியவர்களில் குமரகுருபரர் முக்கியமானவர். அவர் ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர் தான் (1625 - 1688). வட இந்தியாவில் சைவ சமயத்தை பரப்பியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு.

குமர குருபரர், காசியில் சைவ மடாலயலங்களை அமைப்பதற்காக, ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே போல, பலவேறு கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியதற்கான குறிப்புகளும் இருக்கின்றன.

காசியில் விஸ்வநாதர் கோயிலை ஒளரங்கசிப் இடிக்கச்சொல்லி உத்திரவிட்டார். அக்கோயில் இடிக்கப்பட்டது. அதற்கு காரணமாக கூறப்படும் சம்பவம் இதுதான். ஒரு ஹிந்து ராஜாவின் ராணிகள், காசியில் குளிக்க வந்தனர். அந்த ராணிகளுள் ஒருவர், கோயிலில் வைத்து அவமானப்படுத்தப்பட்டார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக மற்ற ஹிந்து ராஜாக்கள் முறையிட்டனர். விஸ்வநாத விக்கிரகம் அங்கிருந்து அகற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

கோயில் மட்டுமல்ல, கோல்கொண்டாவில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் கூறுவார்கள். கோல்கொண்டா மன்னன், தானஷா, பல ஆண்டுகள் வரியெதுவும் கட்டாமல், அந்த பணத்தை புதைத்து மசூதி ஒன்றைக் கட்டிவிட்டான். கோபமடைந்த ஒளரங்கசீப், மசூதியை இடிக்கச்சொன்னார். பணம் மீட்கப்பட்டது.

மற்றபடி ஒளரங்கசீப் ஆட்சியில் கட்டாய மத மாற்றங்கள் இருந்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை. தன்னிடம் சரணடைந்த சிற்றரசர்களை மதம் மாறச் சொல்லியெல்லாம் கட்டாயப்படுத்தவும் இல்லை.

ஆடம்பரத்தை விரும்பாத மனிதர் அவர். ஒரு பேரரசராக இருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்தவர். அவ்வளவு செலவு செய்து தன் தந்தை, தாய்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர்., இன்னொரு கருஞ்சலவைக் கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளைத் தடுத்தவர். இருந்தாலும் ஒளரங்கசீப் சில முக்கியமான சின்னங்களை கட்டினார்.

லாஹூரில் பாட்ஷாய் மஸ்ஜித் (Bhadshai Masjidh) என்ற மிகப் பெரிய மசூதியைக் கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டுத்தளத்தை கொண்டது இந்த மசூதி.

டெல்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் (Moti Masjidh) என்ற சிறிய மஸ்ஜித் ஒன்றையும் கட்டினார்.

லாஹூர் கோட்டையைச் சுற்றியிருக்கும் பதிமூன்று நுழைவாயில்களில் ஒன்றான 'ஆலம் கீர்' என்ற பிரமாண்டமான கட்டடம் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.
எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான் ஒளரங்கசீப்பால் முகலாயப்பேரரசை கட்டிக்காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.

7. சீக்கியர்களுடன் சிக்கல்

கி.பி 1500-ல் குருநானக்கால் உருவாக்கப்பட்டது சீக்கிய மதம். அக்பர் பிற மதத்தினரைப் போலவே சீக்கியர்களுக்கும் பெருமதிப்பு கொடுத்தார். அவர்களுக்குப் பெரிய பதவிகளையும் வழங்கி கௌரவித்தார். ஆனால் அவருக்குப்பின் முகலாயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் பிரச்சனைகள், போர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன.

சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜூன்சிங்குக்கும், ஜஹாங்கீருக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஆறாவது குருவான ஹர்கோவிந்த் சிங்குக்கும் ஷாஜஹானுக்கும் போர் நடந்திருக்கிறது.

ஷாஜஹானின் இறுதி நாள்களில், பேரரசர் பதவிக்காக நடந்த வாரிசு சண்டையில், சீக்கியர்களின் ஏழாவது குருவான ஹர்ராய்சிங், தாராவை ஆதரித்தார். ஆனால் ஒளரங்கசீப் பேரரசர் ஆனதும், தம் மகன் மூலம் சமாதானத்தூது அனுப்பினார்.

சில வருடங்களில் ஹர்ராய்சிங் இறந்து போனார். எட்டாவது குரு யாரென்று கேள்வி எழுந்தது. ஒளரங்கசீப்போடு பழகி வந்த சீக்கியரான ராம்ராய்சிங் தன்னை ஆதரிக்குமாறு ஒளரங்கசீப்பிடம் கேட்டுக் கொண்டார்.

அவரது இன்னொரு சகோதரரான ஹர்கிஷன்சிங்கும், அதே ஆவலோடு இருந்தார். ஆனால் சீக்கியர்களின் மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான் தலையிடுவது சரியல்ல என்று மறுத்துவிட்டார் ஒளரங்கசீப்.

இறுதியில் ஹர்ஹிஷன்சிங் எட்டாவது குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில நாள்களிலேயே அவர் அம்மை நோய்வந்து இறந்துப் போனார்.

இந'த முறையாவது தாம் குருவாக முடியுமா என்ற ஆசை ராம் ராய்சிங்குக்கு இருந்தது. ஆனால் ஆறாவது குருவான ஹர்கோவிந்த சிங்கின் இளைய மகன் தேஜ் பகதூர் ஒன்பதாவது குருவாக நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே முகலாயப்படைகளில் பணியாற்றியவர். நல்ல போர் வீரர்.

ஒருநாள் காஷ்மீரைச் சேர்ந்த பிராமணர்கள் சிலர், குரு தேஜ்பகதூரைச் சந்தித்தனர். முகலாயர்கள் எங்களை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்றும், நீங்கள் தான் எங்களைக்காப்பாற்ற வேண்டும் என்றும் அவரைக் கேட்டுக்கொண்டனர்.

தேஜ்பகதூர் அவர்களுக்கு உதவ முன் வந்தார். 'நானும் இஸ்லாம் மதத்திற்கு மாறினால் தான், அந்த பிராமணர்களும் மாறுவார்கள், என்று ஒளரங்கசீப்புக்குத் தகவல் அனுப்பினார் அவர். அதனால் முகலாயப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்று இஸ்லாமியராக மாற வேண்டும் அல்லது மரணம். தேஜ்பகதூர் மதம் மாற சம்மதிக்கவில்லை. கொல்லப்பட்டார்.

குரு தேஜ்பகதூரின் மரணத்திற்கு காரணம் இப்படியும் சில வரலாற்று ஆசிரியர்ளால் கூறப்படுகிறது. சில ஆசிரியர்கள் வேறுமாதிரியும் கூறுகின்றனர்.

தேஜ் பகதூர் சீக்கியப் படைகளைக் கொண்டு வடமேற்கு இந்தியாவின் பல்வேறு இடங்களை கைப்பற்ற நினைத்தார். பல கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டார். மேலும் தேஜ்பகதூர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள், ராம்ராய்சிங்கால் சுமத்தப்பட்டன.

அதை நம்பிய ஒளரங்கசீப், கைது செய்யச் சொன்னார். குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தேஜ்பகதூருக்கு நிறைவேற்றப்ப்ட மரண தண்டனையால் சீக்கிய - முகலாய மோதல்கள் அதிகரித்தன.

குரு தேஜ்பகதூரின் மகன் கோவிந்த சிங் பத்தாவது குருவாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில் கடுமையான போர்கள் தொடர்ந்தன. சீக்கியர்கள் அதனைப் புனிதப் போராக அறிவித்தனர்.

அளவில் சிறியப்படைகளாக இருந்தாலும், வலிமைப் பொருந்திய சீக்கியர்களை எதிர்கொள்ள முகலாயப் படைகள் திணரத்தான் செய்தன.

சில இடங்களில் முகலாயர்களுக்கு ஆதரவாக ராஜபுத்திரர்களும் போரிட்டனர்.

அனந்த்பூர், சாஹிப் அவர்களால் கைப்பற்றப்பட்டது. குரு கோவிந்தசிங் அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்ட்டார். ஆனால் அவரது இரண்டு மகன்கள், இன்னொரு போர்களத்தில் முகலாயப்படையினரால் கொல்ல்ப்பட்டனர்.

முகலாயர்களுடன் சமாதனமாகப் போய்விடலாம் என்று முடிவெடுத்த குரு கோவிந்த சிங், ஒளரங்கசீப்புக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்துக்கு அவர் வைத்த பெயர் 'ஜாபர் நாமா (வெற்றியின் பாமாலை)'. அந்தக் கடிதம் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது.

ஒளரங்கசீப்பைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் ஏராளமான வரிகள் அதில் இருந்தன. விரைவில் முகலாயப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதில் இருந்தது. ஒளரங்கசீப், பதிலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் தான் குரு கோவிந்த சிங்கைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் சந்திக்க வருவதற்குள் ஒளரங்கசீப் இறந்துப்போனார்.

6. சிவாஜியின் பழக்கூடைகள்

ஒளரங்கசீப்பின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும் போது அதில் தவிர்க்கவே முடியாத பாத்திரம், சத்ரபதி சிவாஜி. மராட்டிய வீரர்.

யார் இந்த சிவாஜி? உண்மையிலேயே வீரரா? அவரது வெற்றிகள் எப்படிப்பட்டவை? ஒளரங்கசீப்புக் கண்ணில் தூசி போல உறுத்தியவாறு அல்லது ஒளரங்கசீப்பினால் காணமல் போனவரா?

பிஜப்பூரை ஆண்டு வந்த சுல்தான் ஆதில்ஷா. அவரது அரசாங்காத்தில் உயர்பதவி வகித்தவர் ஷாஜி. சிவாஜியின் தந்தை.

சிவாஜி தன் வீரத்தாலும், சாதூர்யத்தாலும் பல்வேறு தந்திரங்களாலும் பிஜப்பூருக்கு அருகிலிருந்த பல்வேறு கோட்டைகளை பிடித்திருந்தார். இது ஆதில்ஷாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

'உன் மகனை வரச்சொல், என்று ஷாஜியிடம் கட்டளையிட்டார். அனால் தன் தந்தை அழைத்தும் சிவாஜி, ஆதில்ஷாவைச் சந்திக்கச்செல்லவில்லை. அதனால் ஷாஜி கைதுசெய்யப்பட்டுச் சிறைக்காவலில் வைக்கப்பட்டார்.

அந்தப் பகுதியில் ஓரளவு இடங்களைக் கைப்பற்றியிருந்த சிவாஜி பேரரசர் ஷாஜஹானுக்குத் தூதனுப்பினார்.

'நானும் என்னைச் சார்ந்தவர்களும் முகலாயப் பேரரசருக்குக் கட்டுப்படுகிறோம். பிஜப்பூர் மன்னரிடமிருந்து என் தந்தையை மீட்டுத்தாருங்கள்.'

விஷயம் ஆதில்ஷாவுக்கும் சென்றது. அவர் ஷாஜியை விடுதலைச் செய்தார். சிறிது நாள்களில் ஆதில்ஷா நோய்வாய்ப்பட்டார். சிகிச்சைகள் பலனின்றி 1656, நவம்பரில் மரணமடைந்தார். அவரது அலி ஆதில்ஷா, மன்னரானார். ஆனால் அனுபவமோ, திறமையோ இல்லாத அவரால், அரசை நிர்வகிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் (1657) ஒளரங்கசீப் பிஜப்பூர் மீது படையெடுத்தார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அப்போது சிவாஜி, ஒளரங்கசீப்புக்கு ஆதரவாக இருந்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கை, போர் முழுவதுமாக முடிந்திருந்த நிலையில் தான், ஷாஜஹான் உடல்நிலை சரியில்லை என்றும், தாரா ஆட்சிக்கு வரப்போகிறார் என்றும் செய்திகள் வந்தன. ஒளரங்கசீப், ஆக்ராவை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று.

பிஜப்பூர் தப்பியது, முகலாயர்களை நம்பியிருந்த சிவாஜியும் பதுங்கினார்.

அப்போது பிஜப்பூர் அரசுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் தளபதி அஃப்சல் கான். சிவாஜிக்கும் தெரியும். அவரை வெல்வது எவ்வளவு கடினமான காரியம் என்று. எனவே, தந்திரம் நிறைந்த ஒரு திட்டத்தை தீட்டினார்.

அந்த சமயத்தில் தன்னைத் தாக்குவதற்காக அஃப்சல்கான் பெரும் படையோடு வருவதாக சிவாஜிக்குத் தகவல் வந்தது. 'இரண்டு வாரங்கள் கழித்து நாம் நேரில் சந்திப்போம்', என்று அஃப்சல்கானுக்குக் கோரிக்கை அனுப்பினார் சிவாஜி. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

சந்திப்புக்கான நாள், நேரம், இடம் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் சிவாஜி தனியாளாக அஃப்சல்கானைச் சந்திக்க அவர் தங்கியிருந்த கூடாரத்திற்குச் சென்றார். சமாதனம் தான் பேச வருகிறார் என்ற எண்ணத்தில், அஃப்சல்கான் எந்த ஆயுதங்களையும் தன்னோடு வைத்துக் கொள்ளவில்லை. பாதுகாவலர்களையும் வெளியே அனுப்பிவிட்டிருந்தார்.

இருவரும் மரியாதை நிமித்தமாகத் தழுவினர். அடுத்த நொடியே இருவரும் சண்டைப் போட ஆரம்பித்தனர். சண்டையின் இருதியில் அஃசல்கான் கொல்லப்பட்டார்.

தன்னிடமிருந்த சங்கை எடுத்து ஊதினார் சிவாஜி. அந்தச் சத்தத்தைக் கேட்ட உடனேயே காட்டுக்குள் ஆங்காங்கே ஒழிந்திருந்த அவரது படையினர், களத்தில் இறங்கித் தாக்கத் தொடங்கினர். இந்த எதிர்பாராத கொரில்லாத் தாக்குதலை பிஜப்பூர் படையினர் சமாளிக்க முடியாமல், ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்தனர்.

அந்தத் தாக்குதல் ஆறு மணி நேரங்களுக்கு நீடித்தது.

அந்த மோதலுக்குப் பின், பிஜப்பூர் படைகளுக்கும், சிவாஜியின் படைகளுக்கும் அடிக்கடி போர்கள் நடந்தன. ஒரு கட்டிடத்தில் பிஜப்பூர் அரசு, சிவாஜியுடன் சமாதனப் பேச்சு வார்த்தை நடத்தி, அவரை ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஆட்சியாளராக, சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தது.

அநதப்பகுதிகளில் தக்கணாத்தைச் சார்ந்த சில பகுதிகளும் அடங்கும். சிவாஜி, ஒளரங்கசீப்பின் ஆட்சியின் கீழிருந்த ஒளரங்காபாத் வரையிலான பகுதிகளைக் கைப்பற்றினார்.

சிவாஜியை அடக்க ஒளரங்கசீப், தன் உறவினரும், சிறந்த தளபதியுமான ஷெயிஸ்டகானைத் தாக்காணப்பகுதிகளுக்கு அனுப்பினார். பெரும் படைகளுடன் வந்த ஷெயிஸ்டகான் கல்யாண் என்ற கோட்டையை கைப்பற்றினார். அதே சமயம் சிவாஜி, முகலாயர்களுடன் போரடி, பிரபல்கட் கோட்டையை ஆக்ரமித்தார்.

ஆனால், பலம்வாய்ந்த முகலாயப் படைகளின் முன்னேற்றத்தை சிவாஜியினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தொடர்ந்து மராட்டியப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தார் ஷெயிஸ்டகான். பூனா அவர் வசமானது. அங்கிருந்த லால் மஹாலில் கிட்டத்தட்ட ஒருவருட காலம் தங்கியிருந்தார் ஷெயிஸ்டகான்.

சிவாஜியின் தந்திர முளை, திட்டம் போட ஆரம்பித்தது. வழக்கமான சிந்தனைகள் தான். போரிட்டு வெல்ல முடியாது, தனியாக இருக்கும் தளபதியைக் கொல்ல வேண்டும்.

1663, ஏப்ரல், 5. பூனா நகருக்குள் அந்நியர்கள் நுழையவே முடியாதபடியான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. எனவே, போலியாக ஒரு திருமண ஊர்வலமொன்றை நடத்தினார் சிவாஜி. அதில் மாறுவேடமிட்ட கூட்டத்தோடு கூட்டமாக கலநதுக்கொண்டார். மராட்டிய வீரர்களும் மாறுவேடத்தில் இருந்தனர்.

வாசலில் இருந்த காவலாலிகளிடம் ஊர்வலத்தை உள்ளே அனுமதிக்குமாறு சாதூர்யமாக பேசினார். அனுமதி கிடைத்தது. அவர்கள் பூனா நகருக்குள் நுழைந்தனர். சிவாஜி, பதுங்கிப் பதுங்கிச் சென்று, லால் மஹாலின் பின் வாசல் வழியாக உள்ளே புகுந்தார். ஷெயிஸ்டகானின் அறையைத் தேடிக் கண்டுப்பிடித்தார். அவரைக் கண்ட மறுநொடியே வாளை உருவி வெட்டினார்.

ஷெயிஸ்டகான் சற்று சுதாரித்துக் கொண்டார். தலையைக் குனிந்து அந்த வாள் வீச்சை கையால் தடுத்தார். அவரது மூன்று விரல்கள் துண்டாகிப் போயின. மேலும் ஒரு நொடியும் தாமதிக்காத அவர், ஜன்னல்வழியே, ஏறிக் குதித்துத் தப்பினார். அவருடைய பணியாளர்கள் அவரை பத்திரமான இடத்திற்க்குக் கொண்டு போனார்கள்.

சிவாஜியும், அவரது படைவீரர்களும் பூனாவுக்குள் சிறது தாக்குதல்களை நடத்திவிட்டுத் தப்பித்துச் சென்றனர். அந்த தாக்குதலுக்குப் பிறகு, ஒளரங்கசீப், ஷெயிஸ்டகானை பூனாவிலிருந்து வங்காளத்திற்கு மாற்றினார்.

ஷெயிஸ்டகான் பிடித்துவைத்திருந்த சூரத் நகரின் மேல் 1664-ல் டையெடுத்து வெற்றிப் பெற்றார் சிவாஜி. இந்தியாவின் பெரும் வணிகநகரமான சூரத்தில் சிவாஜியின் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்தன.

எனவே, சிவாஜியை ஒடுக்க ஒளரங்கசீப், ஜெய்சிங் என்ற புதிய தளபதியை நியமித்தார். பெரும் படையுடன் ஜெய்சிங் வருவதை அறிந்த சிவாஜி வழக்கம் போல சமாதானத் தூது அனுப்பினார். ஆனால் ஜெய்சிங் அதை நிராகரித்தார்.

1665-ல் சிவாஜியின் பிடியில் இருந்த புரந்தர் கோட்டை முகலாயப்படையினரால் கைப்பற்றப்பட்டது. அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாக மீண்டும் சிவாஜி செய்தி அனுப்பினார். ஜெய்சிங் ஒப்புக் கொண்டார்.

பேச்சு வார்த்தை நடந்தது. இருபத்திமூன்று கோட்டைகளையும், நான்கு லட்சம் பெருமானமுள்ள தங்கத்தையும் முகலாயர்களுக்குக் கொடுப்பதாகக் கூறினார் சிவாஜி. மேலும் தன் மகன் சாம்பாஜியை முகலாயப் படையில் பணியாற்ற அனுப்புவதாக் கூறினார். தானும் தேவைப்பட்டால் முகலாயப்படைகளுக்கு உதவுவதாக உறுதியளித்தார்.

ஜெய்சிங் அவரது வேண்டுகோள்களை ஏற்று, ஒளரங்கசீப்புக்கு கடிதம் எழுதினார். ஒளரங்கசீப்பும் அனுமதி கொடுத்தார். மேலும் சிவாஜிக்குப் பரிசாகப் பட்டாடை ஒன்றை அனுப்பினார். சிவாஜியின் மகன் சாம்பாஜிக்கு ஐயாயிரம் (5,000) குதிரைகளைக் கொண்ட மன்ஸபத் பதவி வழங்கப்பட்டது.

அதற்குப்பின் சிவாஜியும் அவரது மகன் சாம்பாஜியும் நான்காயிரம் படை வீரர்களுடன் ஒளரங்கசீப்பைச் சந்திக்க ஆக்ராச் சென்னர். அந்தப் பயணச் செலவுக்கான தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆக்ரா சென்றடைந்த சிவாஜி, ஒளரங்கசீப்பின் அமைச்சர்களால் முறைப்படி வரவேற்க்கப்பட்டார். ஒளரங்கசீப்புடனான ச்நதிப்புக்கான நாள், நேரம் குறிக்கப்பட்டது.

அந்த நாளில் சிவாஜி, அவைக்குச் சென்றார். 'மன்னர் சிவாஜியை, வருக!, என்று ஒளரங்கசீப் வரவேற்றார். அதன் பின் சிவாஜி, சிலப் பரிசுப் பொருள்களை அளித்துவிட்டுத் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தார்.

சிவாஜிக்கு 5,000 குதிரைகள் கொண்ட மனஸபத்தார் பதவி வழங்கப்படுவதாக அறிவித்தார் ஒளரங்கசீப். ஆனால், தனக்கு 10,000 குதிரைகளைக் கொண்ட மன்ஸபத்தார் பதவி வழங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார் சிவாஜி. அவரைக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.

சிவாஜி ஜெயபுரி மாளிகையில் அடைக்கப்பட்டார். அதைச் சுற்றிலும் முகலாய வீரர்கள் காவலுக்குப் போடப்பட்டனர். சிவாஜி அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்தார்.

ஒளரஙகசீப்பிடம் அனுமதி வாங்கி, தன்னுடன் அழைத்துவந்தப் படைவீரர்களை திருப்பி அனுப்பினார். தன் மகனையும் ஓரிரு அதிகாரிகளையும் ம்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டார்.

நாளடைவில் ஜெயபுரி மாளிகையில் சிவாஜிக்குப் போடப்பட்டிருந்த காவல் குறைக்கப்பட்டது. அவர், முகலாய அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் நன்றாகப் பழக ஆரம்பித்தார். தன் மராட்டிய சமையல் காரர் சமைத்த உணவுவகைகளை அவர்களுடைய மாளிகைக்கு அனுப்ப வைத்தார். பதிலுக்கு அவர்களும் அன்பு செய்தனர்.

ஆரம்பத்தில் அந்த கூடைகளும் ஜாடிகளும் பாதுகாவலர்களால் கவனமாகப் பரிசோதிக்கப்பட்டன. நாளடைவில் கவனம் குறைந்துப் போனது. இடையில் சிவாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. ஒளரங்கசீப் தக்க மருத்துவ உதவிகள் செய்தார்.

தன் உடல்நிலைச் சரியாவதற்காகச் சில தானங்களைச் செய்ய வேண்டியருப்பதாகச் சொல்லி அனுமதிக் கேட்டார் சிவாஜி. அனுமதி கிடைத்தது. அதன் படி, தினமும் சிவாஜிக்கு கூடைக்கூடையாக இனிப்புகளும், பழங்களும் வந்தன. அவற்றை வைத்து பூஜைகள் செய்தார். பின் துறவிகளுக்கும், ஏழைகளுக்கும் தானமாக அனுப்பினார்.

இந்தச் செயல் பல நாள்கள் தொடர்ந்தன. ஒரு நாள், சிவாஜி தன் மோதிரத்தை ஹிராப்பர் என்பவரின் கையில் அணிவித்தார். அவரை தன் படுக்கையில் படுக்கச் சொல்லி, ஒரு போர்வையால் மூடினார். மோதிரம் அணிந்த கை மட்டும் போர்வைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. சிவாஜியும், சாம்பாஜியும் பூஜைக்காக வந்த இனிப்புக் கூடைக்குள் ஒளிந்து கொண்டார்கள்.

கூடைகள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. பாதுகாவலர்கள் அவற்றைச் சோதனைச் செய்யவில்லை. சிவாஜி ஜெயபுரி மாளிகையிலிருந்து வெளியேறினார். தன் தாடி மீசையை மழித்துவிட்டு ஆக்ராவிலிருந்தும் தப்பித்தார். அங்கிருந்து வழியெங்கும் முகலாயர்களின் கண்களில் படாமல் தன் இடமான ராஜ்கட்டுக்கு வந்து சேர சிவாஜிக்குப் பல மாதங்கள் பிடித்தன.

1670-லிருந்து 1674 வரை தன் ராஜியத்தை கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரித்தார் சிவாஜி. முகலாயர்களுடன் போரிட்டு, இழந்த சில பகுதிகளை மீட்டுக் கொண்டார்.

1674, ஜூன் 6-ம் தேதி, ராஜகட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 'சத்ரபதி', என்றால் ஷத்திரியர்களின் அரசன், என்று பொருள்

1680-ல் சிவாஜி காய்ச்சல் வந்து இறந்து போனார்.

'பத்தொன்பது ஆண்டுகளாக சிவாஜியை எதிர்த்துப் போர் புரிந்திருக்கிறேன், அவர் மிகச் சிறந்த வீரர்', - சிவாஜியின் மறைவிற்கு ஒளரங்கசீப் அளித்த செய்தி இது தான்.

சிவாஜியின் மகன் சாம்பாஜி, மராட்டிய மன்னராக முடிச்சூட்டிக் கொண்டார். மராட்டியர்களிடம் இழந்த பகுதிகளை இனியாவது மீட்கலாம் என்று முகலாயப்படைகள் கிளம்பின. சிவாஜி அளவுக்கு சாம்பாஜி வீரம் நிறைந்தவராக இல்லாவிட்டாலும், முகலாயப்படைகளால் மராட்டியர்களைச் சமாளிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் ஒளரங்கசீப்பின் மகன் மஹம்மது அக்பர், அவரைவிட்டுப் பிரிந்து சாம்பாஜியுடன் சென்று நேர்ந்தான். தம்மிடமிருந்த படைகளை மராட்டியப்படைகளுடன் இணைத்துக் கொண்டான்.

இதற்கு மேலும் டெல்லியிலும், ஆக்ராவிலும் உட்கார்ந்து கொண்டிருந்தால் பயனில்லை என்று உணர்ந்த ஒளரங்கசீப், தக்காணப் பகுதிக்கு இடம் மாறினார். அங்கிருந்தபடியே நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார். முகம்மது அக்பர் பாரசீகத்துக்கு (ஈராக்) தப்பி ஓடினான்.

ஒளரங்கசீப் தொடர்ந்து மராட்டியர்களுடன் போரிட்டார். ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஆனால் அவர்கள் வசமிருந்த ஒரு கோட்டையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. 1689-ல் சாம்பாஜி முகலாயப்படையினரால் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

அதற்குப்பிறகு அவரது சகோதரர் ராஜாராம் தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டார். ஆனால், மராட்டியர்களால் ஒரே தலைமையின் கீழ் செயல்பட முடியவில்லை. சிறு சிறு படைகளாக ஆங்காங்கே முகலாயர்களுடன் மோதிவந்தனர். இந்த மோதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தொடர்நதது.

பல இடங்கள் முகலாயர்களிடமும், மராட்டியர்களிடமும் கைமாறிக் கொண்டேயிருந்தன. சில முறை ஒளரங்கசீப் மீதான கொலை முயற்சிகளும் நடந்தன. அவற்றிலிருந்து அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார் அவர்.
ஒளரங்கசீப்பின் காலத்துக்குப் பின்னரே மராட்டியர்களால் ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட முடிந்தது. அப்போது சிவாஜியின் பேரன் ஷாகு மராட்டிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

5. வாரிசு உரிமைப் போர்

ஒளரங்கசீப் தன் மூத்த மகன் முஹம்மத் கல்தானுக்கும், தனது சகோதரர் ஷூஜாவின் மகளுக்கும் திருமண ஏற்பாடு செய்தார். அதேபோல, தன் மகளுக்கு, ஷூஜாவின் மகனை மணமுடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார். காரணம் குடும்ப உறவுகளை சகோதரர்களுக்குள் பலபடுத்திக் கொள்வதற்கான ஏற்பாடு.

ஆனால் ஷாஜஹான் இந்த திருமணங்களை எதிர்த்தார். சகோதரர்கள் இருவரும் இப்படிக் கூட்டணி சோந்து கொண்டால், தன் மூத்த மகன் தாராவுக்கு ஆபத்தாகிவிடுமே என்ற பயம் தான் காரணம்.

'நீ உன் பிள்ளைகளுக்கு வேறு இடத்தில் மணமுடித்துக் கொடு, இதில் எனக்கு விருப்பமில்லை' என்று கடிதம் அனுப்பினார் ஷாஜஹான்.

' நான் வாக்கு கொடுத்துவிட்டேன். இனிமேல் திருமணத்தை நிறுத்தமுடியாது. மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதில் கடிதம் அனுப்பினார் ஒளரங்கசீப். ஷாஜஹானால் ஆத்திரத்தை அடக்கமுடியவில்லை. ஒளரங்கசீப்புக்காக வழங்கியிருந்த ஆசிர் (Asir) கோட்டையைப் பிடுங்கிக் கொண்டார்.

கோல்கொண்டா சுல்தான், வருடந்தோறும் முகலாய அரசுக்கு வரி செலுத்தி வந்தார். திடீரென்று அதை நிறுத்திவிட்டார். ஒளரங்கசீப், 'ஏன் வரி செலுத்தவில்லை?' என்று கடிதம் எழுதினார். சுல்தானிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'செலுத்த வேண்டிய வரித்தொகையில் பாதியை ஈடுகட்டும் விதமாக யானைகளை அனுப்பிவையுங்கள்' என்றும் கடிதம் அனுப்பினார். அதற்கும் பதிலில்லை.

இந்த நிலையில், கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்கள் என்னுடைய அரசைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து காப்பாற்றினால் நான் முகலாயப் பேரரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்' என்று சந்திரகிரி அரசர் ரங்க ராயலு ஒளரங்கசீப்புக்கு வேண்டுகோள் அனுப்பினார். சந்திரகிரி என்பது பழைய விஜயநகரப் பேரரசின் ஒரு சிறு பகுதி. கிருஷ்ணா நதிக்கு அருகில் அமைந்திருந்தது.

ஒளரங்கசீப், ரங்கரயலுக்கு உதவலாம் என்றிருந்த வேளையில், 'சந்திரகிரியைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள் என்று ஷாஜஹான், கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தான்களுக்கு உத்தரவிட்டார்.

இப்படி ஷாஜஹான் ஏறுக்கு மாறாகச் செய்து வந்த செயல்களினால் பொறுமையிழந்தார் ஒளரங்கசீப்.

'கவர்னர் என்ற பெயர். ஆனால் முழுமையான அதிகாரம் கையில் இல்லை. எந்த முடிவையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியவில்லை. மேற்கொண்டாலும் ஏகப்பட்ட தடைகளை உருவாக்குகிறார் ஷா-இன்ஷா. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் பணிந்து போவது முகலாயப் பேரரசுக்கு நல்லதல்ல.'

முடிவெடுத்த ஒளரங்கசீப், முதலில் கோல்கொண்டாவைக் கைப்பற்ற படைகளோடு கிளம்பினார். 1657-ல் கோல்கொண்டாவை வெற்றி கொண்டார். அதற்குப் பின் பிஜப்பூர் மீதும் போர் தொடுத்தார். அப்போது அளரங்கசீப்புக்கு உதவியாக இருந்தவர் மராட்டிய வீரர்சிவாஜி. (அவர் ஏன் உதவினார், அதன் பின்னணி என்ன எனபதைப் பின்னால் பார்ப்போம்.)

வெற்றி நெருங்கும் வேளையில் ஒரு செய்தி வந்தது. ஒளரஙகசீப் படைகளோடு பிஜப்பூரைவிட்டுப் புறப்பட்டார்.

ஷாஜஹானின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது - என்பதே அந்தச் செய்தி.

ஆனால் அவர் இறந்துவிட்டார் என்ற வதந்தி பல இடங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து, 'தாரா தானட அடுத்த பேரரசராக முடிசூட்டிக் கொள்ளப்போகிறார் என்ற செய்தியும் பரவியது. தாராவின் நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்துவது போலத்தான் இருந்தன. அப்போது தாராவுக்கு வயது 43.

ஷூஜா (வயது 41). தன்னை வங்காளத்தின் அரசராக அறிவித்துக்கொண்டார். முடிசூட்டக் கொண்டார். தன் பெயரிலேயே புதிய நாணயங்களை வெளியிட்டார். ஆக்ராவைக் கைப்பற்றப்போவதாகவும் அறிவித்தார். இது ஷாஜஹானைக் கோபத்திற்குள்ளாக்கியது. தாரவின் படைகளும், ஷாஜஹானின் படைகளும் வங்காளம் நோக்கிச் சென்றன. நடைபெற்ற போரில் ஷூஜா அடக்கப்பட்டார்.

இன்னொரு சகோதரரான முராட் (வயது 33) தன்னை குஜராத்தின் அரசராக அறிவித்து முடிசூட்டிக்கொண்டார். நாணயங்களை வெளியிட்டார். அவருக்கு ஒளரங்கசீப்பின் ஆதரவும் இருந்தது. ஒளரங்கசீப் தன் படைகளோடு கிளம்பி ஆக்ராவை நோக்கிப் பயணம் செய்தார். வழியில் இருந்த பகுதிகளின் ஆட்சியாளர்கள் ஆதரவை எல்லாம் திரட்டினார். முராட்டும் தன் படைகளோடு இணைத்துக் கொண்டார்.

இந'த நேரத்தில்ஈ தாராவைப் பேரரசராக்கப்போவதாக ஷாஜஹான் அறிவித்தார். இது ஒளரங்கசீப்புக்கும், முராட்டுக்கும் பெரும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

ஆக்ராவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அவர்களை மகாராஜா ஜஸ்வந்த் சிங் எதிர்த்து நின்றார். உஜ்ஜைனி அருகே தர்மத்பூரில் போர் தொடங்கியது. பல நாள்கள் தொடர்ந்தது. முடிவில் ஒளரங்கசீப் வென்றார்.

அவரது படைகள் முன்னேறின. சம்பல் பள்ளத்தாக்குகளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு ஜஹானாராவிடமிருந்து ஒரு கடிதம் வந்து சேர்ந்தது.

'நம் தந்தை பேரரசர் ஷாஜஹான் முழுவதுமாகக் குணமடைந்துவிட்டார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் நீ ஆக்ராவை நோக்கிப் படைகளுடன் கிளம்பி வருவதென்பது, துரோகத்துக்குரிற செயலாகும். தாராவை எதிர்ப்பதும் அப்படியே. எனவே, நீ தக்காணத்துக்கு திரும்பிச் செல்வதே தந்தைக்குக் கொடுக்கும் மரியாதை'

ஒளரங்கசீப் பதில் கடிதம் எழுதினார்.

'தாராவின் செயல்கள் வரம்பு மீறிவிட்டன. என் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய தருணம் இது. அதைவிட, என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். தாரா ஆக்ராவில் இருப்பது சரியல்ல, அவனை பஞ்சாப்புக்கு மாற்றுங்கள். ஒரு மகனாக நோயுற்று இருக்கும் என் தந்தையைக் காண வருகிறேன். ஒரு கவர்னராக, பேரரசரைச் சந்தித்து என் மீது எந்தத் தவறும் இல்லை என்று நிரூபிப்பதற்காகவே ஆக்ரா நோக்கி வருகிறேன்.'

ஒளரங்கசீப்பின் இந்தக் கடிதம் ஷாஜஹானைக் கொஞ்சம் கலங்கடிக்கவே செய்தது. 'ஆக்ராவுக்கு வரும் ஒளரங்கசிப்பை சந்திக்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன், என்றொரு பதில் அனுப்பினார். அத்துடன் 'ஆலம்கீர்', (உலகை வென்றவர்) என்று பொறிக்கப்பட்ட வாள் ஒன்றையும் பரிசாக அனுப்பிவைத்தார்.

சாமுகர் (Samugarh) பகுதியில், ஒளரங்கசீப்பின் படைகளுக்கும் தாரவின் படைகளுக்கும் கடுமையான மோதல் நடந்தது. சில மாதங்கள் போர் நீடித்தது. ஒளரங்கசீப்பின் படைகள் வலுபெற்றன. தாக்குப்பிடிக்க முடியாத தாரா, தப்பி ஓடினார். ஒளரங்கசீப், தன் படையினருடன் முன்னேறி ஆக்ராவைச் சூழ்ந்தார். கைப்பற்றினார்.

ஷாஜஹான் அரண்மனையிலேயே சிறைப்படுத்தப்பட்டார் என்று முதல் அத்தியாயத்திலேயே பார்த்தோம். தாரா தோல்வி அடைந்து தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி ஷாஜஹானை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. இருந்தாலும் எப்படியாவது தாரா, படைதிரட்டிக்கொண்டு வந்து மீண்டும் ஆக்ராவைக் கைப்பற்றிவிடுவார் என்று நம்பினார் ஷாஜஹான்.

தனது இன்னொரு மகன் முராட்டுக்கு கடிதமொன்றை எழுதினார். 'நீ உன் படை பலத்தால் ஆக்ராவைக் கைப்பற்று. ஒளரங்கசீப்பை ஒழித்துவிடு. நீ ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொள்.'

இந்த கடிதம் முராட்டிடம் சென்று சேர்ந்தது. அவரது கவனக்குறைவால் அதைத் தாலைத்துவிட்டார். அது ஒளரங்கசீப்பின் கைகளுக்குச் சென்றது. வாசித்துப்பார்த்த அவர், வேதனை அடைந்தார். ஷாஜஹான் இனி கடிதங்கள் எழுதக் கூடாதென்றும், அப்படி எழுத விரும்பினால் தன் மகன் முஹம்மது மூலமாகத் தான் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அவரவர்க்குரிய நகைகள் என்று எதுவும் கிடையாது. எல்லாமே அரசுடைய சொத்துக்கள், மக்களுக்கானவை. எனவே, ஷாஜஹான் தன்னுடைய நகைகள் எல்லாவற்றையும் ஒப்படைக்க வேண்டும் என்று தன் மகன் முஹம்மது மூலம் சொல்லி அனுப்பினார். ஷாஜஹான் தான் சேர்த்து வைத்திருந்த நகைகளை ஒப்படைத்தார். தாராவின் நகைகளும் கைப்பற்றப்பட்டன. முகலாயர்களின் பரம்பரைச் சொத்தான மையிலாசனம் என்ற சிம்மாசனமும், ஒளரங்கசீப் கையில் வந்தது.

முராட், ஆக்ரா படையெடுப்பில் ஒளரங்கசீப்புக்கு கைக்கொடுத்தார். ஆனால் தான் பேரரசர் ஆவதற்குத் தடையாக இருக்கக்கூடாதென்று எண்ணத்தில் ஒளரங்கசீப் அவரைக் கொன்றுவிட்டார் என்றொரு செய்தி உண்டு. ஆக்ராவை கைப்பற்றிய சந்தோஷத்தில், முராட் ஏராளமாகக் குடித்துவிட்டு உல்லாசமாக இருந்தார். மது அருந்துவது இஸ்லாமுக்கு எதிரான செயல் எனவே, ஒளரங்கசீப் அவருக்கு மரண தண்டனை வழங்கினார் என்றும் தகவல் உண்டு.

உண்மையில் முராட் அதிக மது அருந்துபவர் தான். உல்லாசப்பிரியர் தான். அவரது நிர்வாகத்தில் குஜராத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. அதனை தீர்ப்பதற்காக, அலி நாகி என்றொரு வருவாய்த்துறை அமைச்சரை நியமித்தார் ஷாஜஹான்.

அலி நாகியின் கண்டிப்பான நிர்வாகத்தில், குளறுபடிகள் தீர்ந்தன. அதனால் ஊழல் செய்து வந்த பல அதிகாரிகள் முடக்கப்பட்டனர். அவர்கள் அலிநாகியை எப்படி பலிவாங்கலாம் என்று காத்திருந்தனர்.

ஆக்ராவின் வெற்றியை முராட் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது 'அலிநாகி தாராவுக்கு ஆதரவாக செயல்படுகிறார், அவரால் உங்கள் உயிருக்கு ஆபத்து, என்று ஒரு மொட்டைக் கடிதம் முராட்டுக்குச் சென்று சேர்ந்தது. அது, அலிநாகியின் எதிரிகள் சதி.

முராட்டுக்குக் கோபம் தலைக்கேறியது. அலிநாகியை கூப்பிட்டு அனுப்பினார். பார்க்க வந்தவரை என்னவென்று தீர விசாரிக்காமலேயே கொலையும் செய்தார்.

அலிநாகியை முராட் கொலை செய்த சம்பவம், ஒளரங்கசீப்பிடம் புகாராகச் சென்றது. குவாலியரில் உள்ள காஜிகளிடம் (Qazi, அதாவது நீதிபதிகள்) வழக்கை ஒப்படைத்தார் ஒளரங்கசீப். குற்றம் உறுதி செய்யப்பட்டு முராட்டுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சரி இன்னொரு சகோதரர். ஷூஜா என்ன ஆனார்? தனக்குத் தானே வங்காளத்தின் அரசராக முடிச்சூட்டிக் கொண்ட ஷூஜா, தாராவின் படைகளால் தோற்றடிக்கப்பட்டார் என்று பார்த்தோம். போர்களத்தில் இருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடினார்.

மெக் என்ற பழங்குடியினர் வாழும் இடத்தில் தஞ்சம் புகுந்தார். மீண்டும் வங்காளத்தைக் கைப்பற்ற முடியுமா? ஒளரங்கசீப் உதவுவாரா? இல்லை இனி தாரா தான் பேரரசரா? - என்று பல கேள்விகளுக்கான ஷூஜாவுக் தெரியவில்லை. உடன் ஒத்துழைக்கப் படைகளும் இல்லை. இனி ஒரு திரட்ட முடியுமா? அதற்கும் பதில் தெரியவில்லை.

மெக் பழங்குடியினர், அரக்கான் என்ற பகுதி அரசரின் ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்தனர். அந்த அரசரைக் கொன்றுவிட்டால் படைகள் கிடைக்கும். வங்காளத்தை மீண்டும் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டார் ஷூஜா.

ஆனால் ஷூஜாவின் சதி, வெளிப்பட்டது. அரசர் அவரைக் கொல்ல உத்தரவிட்டார். மெக் பழங்குடியினர் அவரைத் துரத்திப்பிடித்துக் கொன்றனர்.

மீதமிருக்கும் ஒரே சகோதரர் தாரா.

அப்போது அவரிடம் ஆயுதங்கள் இல்லை, ஆள் பலம் இல்லை, துணையாகக் கூட யாரும் இல்லை. ஆக்ராவை மீண்டும் கைப்பற்றுவதற்காகக் கனவு கூட காண முடியவில்லை. இவ்வளவு நாள்கள் அதரித்து வந்த பேரரசர் ஷாஜஹானே இப்போது ஒடுக்கப்பட்டுவிட்டார். பாசத்திறகுரிய இளவரசி ஜஹானாராவால் எதுவும் செய்ய முடியாத நிலை.

அடுத்து என்ன செய்ய?

இவ்வளவு நாள்கள் ஒளரங்கசீப் மீது காட்டிவந்த வெறுப்பு என்ன சாதரணமானதா? அவரிடமிருந்து மன்னிப்பெல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை. சிக்கினால் மரண தண்டனைதான்.

ஒரு காட்டுக்குள் பதுங்கியிருந்த தாராவின் எண்ணமெல்லாம் விரக்திதான் நிறைந்திருந்தது. அருகில் அவரது நாதிரா இறந்து கிடந்தார்.

அந்த நேரத்தில் மாலிக் கான் என்ற படைத்தளபதி அங்கு வந்தான். அவனைப் பார்த்ததும் தாராவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட்டது. தாராவுக்கு விசுவாசமாக இருந்தவன் மாலிக். அவன் மூலமாக ஏதாவது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் மாலிக் அப்போது வந்திருந்தது தாராவைக் கைது செய்வதற்காக. அவர் எதிர்ப்புக் காட்டவில்லை. காட்டும் நிலையிலும் இல்லை. கைது செய்யப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டார் தாரா. அங்கே அரசு சபைக் கூடியிருந்தது. ஒளரங்கசீப்பும் ரோஷனாராவும் அமர்ந்திருந்தனர். தாரா மீதான விசாரணை தொடங்கியது (1659).

'நீ ஒரு இஸ்லாமியனாக நடந்துக் கொள்ளவில்லை, மத துரோகம் செய்திருக்கிறாய்.'

ஒளரங்கசீப், தாராமீது கூறிய முக்கிய குற்றச்சாட்டு இது தான். அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நிறைவேற்றப்பட்டது. தாராவை சங்கிலிகளால் பிணைத்து, டெல்லி வீதிகளில் இழுத்துவந்தார்கள். அவரைக் கொன்று தலைமட்டும் ஷாஜஹானுக்கு அனுப்பி வைத்தார்கள். ஷாஜஹானைக் கொல்வதற்கும் ஒளரங்கசீப் சதி செய்தார். தன் பணியாளர்கள் மூலமாக ஓரிரு முறை உணவில் விஷம் கலந்து கொண்டுச் சென்றனர். ஆனால் அந்த பணியாளர்கள் தாங்களே விஷத்தை அருந்தி ஷாஜஹனை காப்பாற்றினர்.

இப்படி ஒளரங்கசீப் எதிரான செய்திகள் நிறையவே உலவுகின்றன.
தன் நாற்பதாவது வயதில் (1658), ஒளரங்கசீப் முகலாயப் பேரரசர் ஆனார்.

4. சூழ்ச்சி

ஷாஜஹான், புதிய மாளிகை ஒன்றைக் கட்டிக்கொள்ள தாராவிற்கு பணம் கொடுத்தார். தாராவும் தன் விருப்பப்படி மாளிகை ஒன்றைக் கட்டி முடித்தார். அதைப் பார்வையிடுவதற்காகத் தன் தந்தையையும், சகோதர, சகோதரிகளையும் அழைத்தார். எல்லோரும் ஒவ்வேர் அறையாகப் பார்த்து ரசித்தனர்.

ஓர் அறை முழுவதும் பெரிய நிலைக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த அறக்குள் எல்லோரையும் அழதைத்தார் தாரா. எல்லோரும் சென்று கண்ணாடி பிம்பங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒளரங்கசீப்அறையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டார்.

அது தாராவுக்கு கோபத்தைத் தூண்டியது, 'ஒளரங்கசீப்பைப் பார்த்தீர்களா? தந்தையே, என்னை அவமரியாதை செய்யும் விதமாக அறைக்கு உள்ளே வராமல், வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறான்.'

ஷாஜஹானுக்கும் அப்போது கோபம் தோன்றியது.

'உன் மதிப்பை நீயே குறைத்துக் கொண்டு, இப்படி அறைக்கு வெளியே தரையில் உட்கார வேண்டிய அவசியம் என்ன? ஒளரங்கசீப்.'

காரணம் இருக்கிறது. இப்போது கூற முடியாது. சமயம் வரும்போது சொல்கிறேன். தொழுகைக்கு நேரமாயிற்று. நான் பிறகு வந்து உங்களை சந்திக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஒளரங்கசீப் விறுவிறுவென வெளியே சென்றுவிட்டார்.

'பார்த்தீர்களா தந்தையே, உங்களையும் அவமானப்படுத்திவிட்டான் அவன்' என்று தாரா ஷாஜஹானின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டார்.

'இனி தர்பாருக்கு ஒளரங்கசீப் வரக்கூடாது என்று அவனிடம் கூறிவிடுங்கள்' என்று கட்டளையிட்டார் ஷாஜஹான்.

விஷயத்தை கேள்விபட்ட ஒளரங்கசீப்புக்கு ஏகப்பட்ட வருத்தம். தந்தை மீது, முக்கியமாக தாரா மீது எக்கச்சக்கமான கோபம். அடுத்த ஏழு மாதங்களுக்கு அரசவை நடக்கும் தர்பாருக்கே போகவில்லை. தான் அன்று அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்த காரணத்தை, ஒரு நாள் தன் பாசத்திற்குறிய சகோதரி ரோஷனாராவிடம் போட்டுடைத்தார் ஒளரங்கசீப்.

'அன்று தாரா அந்த அறைக்கு நம் எல்லோரையும் அழைத்துச் சென்றான். அந்த அறைக்குள் நுழையவும், வெளியே வரவும் இருந்தது ஒரே வாசல்தான். அது எனக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. மேலும் தாரா, உள்ளே செல்வதும்,அறைக்கு வெளியே வந்து வேவு பார்ப்பதுமாகச் சந்தேகம் தரும்படி உலவிக் கொண்டிருந்தான். நம் தந்தை உட்பட எல்லோரையும் அந்த அறைக்குள் வரவழைத்து, அடைத்து, பின் கொல்வதே அவன் திட்டம் என்பது என் சந்தேகம். அதனால் தான் எல்லோரையும் தாராவின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் விதமாக வெளியே ஒரு காவல் காரனாக உட்கார்ந்து கொண்டேன். தந்தை அதைத் தவறாகப் புரிந்துக்கொண்டு என்னை அவமானப்படுத்திவிட்டார்.

ரோஷனாரா மூலமாக ஷாஜஹானின் காதுகளுக்கு இந்த விஷயம் போனது. ஆனால் அவர் ஒளரங்கசீப்பை நம்பினாரோ இல்லையோ, தாராவின் மீதான தன பாசத்தை கொஞ்சம் கூடக் குறைத்துக்கொள்ளவில்லை. ஒளரங்கசீப்பின் மீது தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டார். குஜராத்தின் கவர்னர் பதவியை ஒளரங்கசீப்புக்குக் கொடுத்தார் (1645).

அங்கும் அவரது திறமையான நிர்வாகம் வெளிபட்டது. அதே நேரத்தில் பால்க் (Balk ), பாடக்ஷான் (Badakshan) பகுதிகள் முகலாயர்கள் கையைவிட்டுப் போகும் நிலையில் இருந்தன. அந்தப் பகுதிகளின் கவர்னராக இருந்த ஷாஸஹானின் நான்காவது மகன் முராட்டின் திறமையின்மை தான் அதற்குக் காரணம். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் முராட் திணறிக் கொண்டிருந்தார்.

ஷாஜஹான், முராட்டை பதவியிலிருந்து நீக்கினார். ஒளரங்கசீப்பைப் பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னார். ஒளரங்கசீப்பின் படைகள் எதிரிகளைத் துவம்சம் செய்தன. மீண்டும் அந்தப் பகுதிகள் முகலாயர்களின் வசமாயின.

'காந்தஹாரைக் கைப்பற்று' - ஷாஜஹான் ஒளரங்கசீப்புக்குப் போட்ட அடுத்த உத்தரவு இதுதான்.

முதன் முதலில் பாபர் காந்தஹாரைக் கைப்பற்றினார். அதற்கு பின் முகலாய மன்னர்கள் ஒவ்வொருவரும் காந்தஹாரை ஏதாவது ஒரு வகையில் தம் வசமாக்கிக் கொணடனர். காந்தஹார் முகலாயர்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே கைமாறிக் கொண்டே இருந்த பகுதி.

1638-ல் ஷாஜஹான், பாரசீக கவர்னர் மாதார்கானிடம் ஏராளமான பணத்தைக் கொடுத்து ஆட்சி, அதிகாரத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் இரண்டாம் ஷா அப்பாஸ் என்பவர், படைதிரட்டி கொண்டு வந்து முகலாயர்களுடன் போரிட்டார். நாற்பது நாள்களுக்கும் மேலும் நீடித்த போரின் இறுதியில், காந்தஹார் மீண்டும் பாரசீகர்களின் வசமானது (1649, பிப்ரவரி).

படைகளோடு கிளம்பினார் ஒளரங்கசீப் (1649, மே) முகலாயப் படைகளோடு ஒப்பிடுகையில் பாரசீகப்படைகள் மிகவும் வலிமையாக இருந்தன. அவர்களிடம் புதிய ஆயுதங்களும், போர்க்கருவிகளும் இருந்தன. குறிப்பாக, பீரங்கிகள். முகலாயப் படையினரின் எண்ணிக்கையும் குறைவு. சொல்லிக் கொள்ளும்படியான போர்க் கருவிகள் எல்லாம் இல்லை. பீரங்கிகள் கூட மிகவும் பழசு. வலிமை குன்றியவை.

அப்போது முகலாயர்களின் ஒரே பலமாக இருந்தவர் சிறந்த படைத்தளபதியாக விளங்கிய சாதுல்லாஹ்கான் (Sadullahkhan). அவருக்கு அடுத்த இடத்தில்தான் ஒளரங்கசீப் இருந்தார். இந்நிலையில் ஷாஜஹான், 'இங்கே முற்றுகையிட வேண்டும், அப்படித் தாக்க வேண்டும், இப்படி போரிட வேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் வகுத்து ஆக்ராவிலிருந்தபடியே கடிதங்கள் அனுப்பிக்கொண்டு இருந்தார்.

இருக்கின்ற படைபலத்தைக் கொண்டு ஷாஜஹானின் உத்தரவுப்படியெல்லாம் செயல்பட முடியாது என்று ஒளரங்கசீப்புக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மற்ற இரு தளபதிகளும் ஷாஜஹானின் உத்தரவுப்படியே செயல்பட்டனர். முகலாயப்படையினருக்குப் பலத்த அடியே கிடைத்தது.

ஷாஜஹான், தன் படைகளைத் திரும்ப வரச் சொல்ல செய்தியனுப்பினார். ஆனால் ஒளரங்கசீப்பின் திறமையில்லாதத் தாக்குதலினால் தான், இப்படி பின்வாங்க வேண்டியிருந்தது என்று ஷாஜஹான் குற்றம் சாட்டினார். மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு ஒளரங்கசீப் பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

ஷாஜஹானும் வாய்ப்பு வழங்கினார். ஆனால் ஒளரங்கசீப்புக்கு அல்ல, தாராவுக்கு. தான் தாராவோடு சோர்ந்து போருக்கு போகிறேன் என்று ஒளரங்கசீப் வேண்டுகோள் வைத்தார். அதனை உதாசீனப்படுத்தினார் ஷாஜஹான்.

தாராவின் தலைமையில் சென்றது பலம் வாய்ந்த முகலாயப் படை. புதிய போர்க்கருவிகளும் இடம் பெற்றிருந்தன.காந்தஹார் முற்றுகை தொடங்கியது. ஐந்து மாதங்களாக நீடித்தது. இறுதியல் கிடைத்தது தோல்வியே.

தாரவின் தோல்வி ஷாஜஹானைப் பாதிக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒளரங்கசீப்பை தக்காணத்தின் கவர்னராக நியமித்தார். அவரது ச்பளம் குறைக்கப்பட்டது. அப்போது தக்காணத்தில் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒளரங்கசீப்புக்குப் பின் அங்கு நிர்வாகத்தில் இருந்தவர்களால் ஊழலும் சீர்கேடுகளும் மலிந்திருந்தன. பொருளாதார நிலை மிகவும் மோசமாகிப் போயிருந்தது.

ஒளரங்கசீப் நிர்வாக முறைகள் அனைத்தையும் மாற்றியமைத்தார். கொருளாதார நிலையைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தினால், சில வளமான பகுதிகளைத் தன் அதிகாரத்தின் கீழ் கொடுக்கும் படி ஷாஜஹானிடம் கோரிக்கை வைத்தார். தயவுதாட்சண்யமின்றி கோரிக்கைகள் நிராகரிக்ப்பட்டன. அவ்வளவு நாள்கள் ஒளரங்கசீப்பிடம் பணியாற்றி வந்த திறமையான அதிகாரிகள் பலர், ஷாஜஹானால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தக்காணத்தின் கவர்னராக ஒளரங்கசீப் இருந்தாரே ஒழிய, செயல்படுத்தப்பட் வேண்டிய உத்தரவுகள் எல்லாம் பேரரசர் ஷாஜஹானிடம் இருந்துதான் வந்தன. தன்னிடம் அதிகாரம் இருந்தால் தான், பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்ற ஒளரங்கசீப்பின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இப்படி ஷாஜஹானுக்கும் ஒளரங்கசீப்புக்கும் இடையே பனிப்போர் நீண்டு கொண்டே போனது. ஷாஜஹானின் வெறுப்பு ஒளரங்கசீப்பிடம் மட்டுமின்றி, அவரது பிள்ளைகளிடமும் தொடர்ந்தன. தாராவின் பிள்ளைகள் மீது பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தார்.

3. பதவியா? துறவியா?

தக்காணப் பீடபூமி. இந்தியாவின் மையப்பகுதியில் தொடங்கி, தென்பகுதியில் தமில் நாடு வரை நீளும் ஒரு தலைகீழ் முக்கோணம் தான் அது.

தபதி நதி பாயும் பகுதிகளைக் கொண்ட காந்தேஷ் பகுதி, அதற்குத் தென்கிழக்கில் இருந்த இன்றைய மத்திய பிரதேசத்துக்குள்பட்ட பகுதி, கர்கியைத் தலைநாகராகக் கொண்ட தௌலதாபாத் பகுதி, நான்தெரைத் தலைநகராகக் கொண்ட இன்றைய ஆந்திராவின் பகுதி - இவற்றையெல்லாம் உள்ளடங்கியதே தக்காணம்.

பின்னர் ஒளரங்காபாத் என்று ஒளரங்கசீப்பால் பெயரிடப்பட்டது.

1634-ல் ஷாஜஹான், ஒளரங்கசீப்பை தக்காணத்தில் சுபேதாராக (கவர்னர்) நியமித்தார். அப்போது தக்காணம் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் வளமான பகுதியாக இல்லை. பல்வேறு விதமான பிரச்சனைகள் முற்றிப் போயிருந்தன. போர்களங்களும் காத்திருந்தன.

உத்கீர், பக்லானா, அவுஸா போன்ற தக்காணத்தின் சில முக்கிய பகுதிகளைக் கைப்பற்றினார். 1637-ல் ஒளரங்கசீப், நவாப் பாய் பேசம் என்ற ரஜபுத்திர இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக, பாரசீக அரச குடும்பத்தைச் சார்ந்த தில்ராஸ் பானு பேகத்தை திருமணம் செய்து கொண்டார்.

ஒளரங்கசீப்பின் நிர்வாகத்தில் வருமானமே இல்லாமல் இருந்த தக்காணப் பகுதிகளிலிருந்து வருவாய் வர ஆரம்பித்தது. இந்த சமயத்தில் தாரா, ஷாஜஹானுக்கு மிகவும் வேண்டிய பிள்ளையாகத் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார் எந்த விஷயத்திலும் முதல் உரிமை தனக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

ஏகப்பட்ட பிரச்சனைகள், எப்பொது வேண்டுமானாலும் யாரும் பொருக்கு கிளம்பி வரலாம் என்ற நிலை. மன அமைதிக்காக ஒளரங்கசீப் தேர்ந்தெடுத்த வழி ஆன்மீகம். தினமும் ஐந்து வேளை தவறாமல் தொழுகை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குர்-ஆன். சிறு வயதிலேயே அவருக்கு குர்-ஆன் மீது தனிப் பிரியம் ஏற்பட்டது. தன் அழகான கையெழுத்தால் குர்-ஆன் முழுவதையும் எழுதுவது, அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

அரச குடும்பத்தைச் சார்ந்திருந்தாலும், சக்தி வாய்ந்த தளபதியாக இருந்தாலும், ஒளரங்கசீப் ஆடம்பரத்தை விரும்பவில்லை.

இஸ்லாம் மத நெறிகளின்படி மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். சில சமயங்களில் ஃபகீர் (பிச்சைக்காரர்) போல அலைந்தார். அனாலும் நிர்வாகத்தில் சரியாக செயல்பட்டார்.

1644. ஆக்ரா மாளிகையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்திச் சென்று கொண்டிருந்தார் இளவரசி ஜஹானாரா. திடீரென்று கையிலிருந்து தவறி விழுந்தது மெழுகுவர்த்தி. ஜஹானாராவின் ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடலில் பல இடங்களில் தீக்காயம். ஆறுவதற்குப் பல மாதங்கள் பிடித்தன.

ஒளரங்கசீப்புக்கு இந்த விஷயம் மெதுவாகத் தான் தெரிய வந்தது. கேள்விப்பட்ட உடன் அக்ராவுக்கு கிளம்பினார். ஜஹானாராவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது தன்தந்தை ஷாஜஹானையும் சந்தித்தார். தக்காணப் பகுதி நிலவரங்களையெல்லாம் விரிவாகச் சொன்னார்.

அனால் ஷாஜஹான் சரியாகப் பெசவில்லை.

'தந்தையே! என்ன ஆயிற்று?'

'என்ன ஆயிற்று என்றா கேட்கிறாய்? உன் சகோதரிக்கு இப்படி ஒரு கோரமான விபத்து நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. நீ அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் நிதானமாகப் பார்க்க வருகிறாய்? உன் அன்பு அவ்வளவு தானா?'

ஒளரங்கசீப் பதில் எதுவும் சொல்லவில்லை. என்ன சொன்னாலும் எடுபடாது என்பது அவருக்குத் தெரிந்த விஷயமே. மௌனமாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இதே நேரத்தில் தாரா, ஷாஜஹானிடம் பேச வந்தார்.

'தந்தையெ, ஒளரங்கசீப்பை நம்பி தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பை வழங்கியிருக்கிறீர்கள். ஆனால் அவனோ அங்கே ஒரு பிச்சைக்காரன் போல திரிகின்றானாம். அவனுக்கு அந்தப் பதவிமேல் விருப்பமில்லையாம். வாளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மதத்துறவியாக மாறப்போகிறானாம், அவனது நண்பர்கள் சொல்கிறார்கள். அவன் இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால், நம் பேரரசை எப்படிக் காப்பாற்ற முடியும்?'
ஷாஜஹானுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உடனே ஒளரங்கசீப்பை கவர்னர் பதவியிலிருந்து நீக்கினார். விஷயமறிந்த ஒளரங்கசீப் மனதளவில் மேலும் பாதிக்கப்பட்டார்.

2. பணயக் கைதி

முகலாயர்களின் முதல் பேரரசர் பாபர் இறந்தப்பிறகு, அவரது மகன் ஹூமாயூன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அரியாசனம் ஏறினார். ஹூமாயூன் ஒரு விபத்தில் இறந்துவிட, மிகச்சிறிய வயதிலேயே அக்பர் பதவிக்கு வந்தார்.
ஆனால் அக்பருக்குப் பின் அவரது மகன் ஜஹாங்கீர் பதவிக்கு வருவதில் தந்தை - மகன் மனஸ்தாபங்கள் இருந்தன. ஜஹாங்கீருக்கும் அவருடைய மகன் ஷாஜகானுக்கும் ஒத்து வரவில்லை.
தனக்குப் பின் ஷாஜகனைத்தான் முகலாயப் பேரரசராக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஜஹாங்கீருக்கு இல்லை. காரணம், ஷாஜகான் ஜஹாங்கீரின் மூன்றாவது மகன். ஷாஜகானுக்கு தான் ஷா-இன்-ஷா ஆக வேண்டும் என்ற ஆசை. எனவே, முகலாயப் படைகளின் தளபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஷாஜகான், ஜஹாங்கீரின் ஆளுகைக்குக் கீழிருந்த பகுதிகளிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஆரம்பித்தார். விளைவு?
ஜஹாங்கீருக்குக் கடும் கோபம். தன் படைகளை அனுப்பி ஷாஜஹானை அடக்கினார். எச்சரித்தார்.தகவல் ஒன்றை அனுப்பினார்.
'நான் உன்னைக் கைது செய்துவிடலாம். வேண்டாம் இனியாவது ஒழுங்காக இரு. உனக்குப் பதிலாக உன் மகனை என்னிடம் பணயக் கைதியாக அனுப்பி வை.'
ஷாஜஹான், ஜஹாங்கீரின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். எந்த மகனை அனுப்பி வைக்கலாம்?
ஷாஜஹானுக்கு மொத்தம் பத்து மனைவியர்கள். மூன்றாவது மனைவிதான் மும்தாஜ் மஹால் பேகம். மற்ற மனைவியரைவிட மும்தாஜ் மீது மட்டும் ஷாஜஹானுக்குக் காதல் அதிகம். மொத்தம் ஏழு குழந்தைகள்.
முதல் மகள் ஜஹனாரா பேகம், முதல் மகன் தாரா ஷீகோ, இரண்டாவது மகன் ஷா ஷூஜா, இரண்டாவது மகள் ரோஷனாரா பேகம், மூன்றாவது மகன் ஒளரங்கசீப்*, நான்காவது மகன் முராட் பக்ஷ், கடைசி மகள் கௌஹாரா பேகம்.
-----------------------------------------------------------------------------------------------
* ஒளரங்கசீப் 1618, நவம்பர் 3-ல் பம்பாய் மாகாணத்திலிருந்த டாஹோட் (Dahod) என்ற இடத்தில் பிறந்தார்.
------------------------------------------------------------------------------------------------
மூத்தமகன் தாரா மீது ஷாஜஹானுக்கு அளவுக்கடநத பாசம் உண்டு. முதல் ஆண் வாரிசு தான் தனக்குப் பின்பு அரசாள வேண்டும் என்ற எண்ணம். அதேபோல, மூத்த மகள் ஜஹனாரா மீதும் ஏராளமான அன்பு செலுத்தினார் ஷாஜஹான். காரணம் அவள், தோற்றத்தில் மும்தாஜைப் பொலவே இருப்பாள்.
'ஜஹாங்கீர், பணயக் கைதியாக உன் மகனை அனுப்பி வை என்று தானே சொல்லியிருக்கிறார். எந்த மகனை என்று சொல்லவில்லையே. முதல் மகன் தாரா எனக்கு மிகவும் முக்கியமானவன். வெண்டுமென்றால் மூன்றாவது மகன் ஒளரங்கசீப்பை அனுப்பலாம்' - இப்படி முடிவெடுத்த ஷாஜஹான் ஒளரங்கசீப்பைக் கூப்பிட்டு அனுப்பினார்.
'மகனே, நீ சிறிதுகாலம் உன் தாத்தாவின் அரண்மனையில் இருந்துவிட்டு வா, அங்கேயே நீ படிக்கலாம். சுதந்திரமாகச் சுற்றி வரலாம். சென்று வா.'
இந்த சம்பவம் சிறுவயதில் ஒளரங்கசீப்பின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்தது. 'எனக்கு அண்ணன்கள் இருவர் இருக்கும் போது, என்னை பணயக் கைதியாக அனுப்புகிறாரே, அப்படியானால் நான் அவருக்கு வேண்டாத பிள்ளையா?: - மிகவும் குழம்பிப் போனார் ஒளரங்கசீப்.
ஆனால் ஜஹாங்கீர், தன் பேரனை மனமகிழ்ச்சியுடன் வரவேற்றார். அனாலும் ஷாஜஹானுக்கு மீண்டும் ஒரு செய்தி அனுப்பினார். 'என்னை ஏன் ஏமாற்ற நினைக்கிறாய்? நான் அனுப்பச் சொன்னது உன் மூத்த செல்ல மகன் தாராவை. அவனை அனுப்பி வை. அப்போதுதான் உன்னை மன்னிக்க முடியும்.'
ஷாஜஹானுக்கு வேறு வழியில்லை. தாராவை ஜஹாங்கீரிடம் அனுப்பிவைத்தார். இருவரும் தங்கள் தாத்தாவின் அரண்மனையிலேயே வளர்ந்தனர், படித்தனர். 1627-ல் ஜஹாங்கீர் இறந்து போனார். தாராவும் ஒளரங்கசீப்பும் தங்கள் பெற்றோர்களிடம் திரும்பினார்கள்.
'என் தந்தை பாரபட்சமாக நடந்துகொள்கிறார். என்னை விட அவருக்குத் தாராதான் முக்கியமானவன். நான் இனி அவர்மீது பாசம் வைக்கப்போவதில்லை' - ஷாஜஹானிடம் திரும்பியபோதும். ஒளரங்கசீப்புக்குள் அந்தக் கோபம் வளர்ந்துக்கொண்டே போனது. ஷாஜஹானுக்குப் பிரியமனா மகன் என்பதால் தாரா மீதும் வெறுப்பு வளர்ந்தது.
தன் மகன்களுக்கும் மகள்களுக்கும் செலவுக்காகத் தினமும் பணம் அளிக்கும் வழக்கம் ஷாஜஹானுக்கு இருந்தது. தாராவுக்குக் கொடுக்கும் பணத்தில் சரி பாதியைத்தான் ஒளரங்கசீப்புக்கு அளித்தார் அவர். இது ஒளரங்கசீப்பை மேலும் காயப்படுத்தியது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அந்த மைதானம் எங்கும் மக்களின் ஆராவாரம். உற்சாகக் கைத்தட்டல்.
பேரரசர் ஷாஜஹான் உப்பரிகையில் உட்கார்ந்திருந்தார் நடந்துகொண்டிருந்தவற்றை ரசித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் விதவிதமான சண்டைகள் நடந்து கொண்டிருந்தன.
முக்கியமாக யானைச்சண்டை. இரண்டு யானைகள். அதன் மேல் இரண்டு வீரர்கள். மோதிக் கொண்டனர். சராமாரியாக ஈட்டிகள் பாய்ந்துக் கொண்டிரந்தன. மைதானத்தில் வேறு யானைகளும் நின்றுக் கொண்டிருந்தன.
திடீரென்று பாய்ந்து வந்த ஓர் ஈட்டி, ஓரமாக நின்றுக் கொண்டிருந்த ஒரு யானையின் காதைப் பதம் பார்த்தது. யானைக்கு ஆத்திரம் தலைக்கேறியது. மதம் பிடித்தது போல மைதானத்தின் உள்ளே ஓட ஆரம்பித்தது. உள்ளேயிருந்த மற்ற வீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர்.
மைதானத்தின் உள்ளே தான் இருந்தார் ஒளரங்கசீப். யானை அவரை நோக்கித்தான் ஓடி வந்து கொண்டிருந்தது. மக்கள் எல்லோரும், இளவரசரை அங்கிருந்து ஓடிப்போகுமாறு கத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் ஓர் அடிகூட பின்னால் நகரவில்லை.
தன் கையிலிருந்த ஈட்டியைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். யானை வேகத்தை அதிகரித்து ஒளரங்கசீப்பை நெருங்கியது.
ஈட்டியை வீசுவதற்கு தயாராக இருந்த அவர், அதன் நெற்றியைக் குறிபார்த்து எறிந்தார். நிலைகுலைந்து போன யானை கீழே விழுந்தது. அடுத்த நொடி மைதானமே அதிர்ந்தது. அப்போது அவருக்கு வயது பதினைந்து.
ஷாஜஹான் பயந்தேபோனார். ஒளரங்கசீப்பை அழைந்தார்.
'ஏன் இப்படி ஒரு விபரீத விளையாட்டில் இறங்குகிறாய்?' என்று கடிந்து கொண்டர்.
'நான் என் வீரத்தைக் காட்டினேன். இம்மாதிரி வீரச்செயல்களின்போது மரணம் நேர்ந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாமே!' என்றார் ஒளரங்கசீப் சிரித்துக் கொண்டே.
அந்தப் பதிலுக்கு எதிராகப் பேச முடியாத ஷாஜஹான் ஒளரங்கசீப்புக்கு பகதூர்ஷா என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், தனது பதிமூன்றாவது பிரசவத்தில் இறந்து போனார் (1631, ஜூன்). ஷாஜஹானால் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பேரரசு முழுவதும் ஒரு வருடம் துக்கத்தை அறிவித்தார். எல்லாக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்பட்டன.
'என் நினைவாக, நம் காதலின் அடையாளமாக சின்னம் ஒன்றை நீங்கள் கட்ட வேண்டும். இது என் கடைசி ஆசை.' மும்தாஜ் உயிரைவிடுவதற்கு முன் சொன்ன வார்த்தைகள் ஷாஜஹானின் காதினுள் ஒலித்துக் கொண்டே இருந்தன.
மும்தாஜூக்கென்று ஒரு நினைவு மாளிகை கட்ட வேண்டுமென்று திட்டமிட ஆரம்பிதார். இதுவரை முகலாயர்கள் கட்டியதிலேயே மிகவும் பிரம்மாண்டமான மாளிகையாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதற்காகப் பாரசீகத்திலிருந்து கட்டடக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டார்கள். கட்டடத்தின் வரைபடங்கள் உருவாக்கப்பட்டன.
தாஜ்மஹால் கட்டுவதற்கு யமுனை நதிக்கரையொரமாக இடம் தேர்வுசெய்யப்பட்டது. தாஜ்மஹால் கட்டடம், அதைச்சுற்றி அமையவிருக்கும் தோட்டத்துக்கான அளவு, கட்டடத்துக்கு வெளியே மன் பகுதியல் அமையவிருக்கும் நீரூற்றுக்களுக்கான இடம் எல்லாம் முடிவு செய்யப்பட்டன.
வேலை செய்ய எத்தனை ஆள்கள் தேவைப்படும், எவ்வளவு வருடங்கள் பிடிக்கும், பணம் எவ்வளவு செலவாகும் என்பது பற்றியெல்லாம் ஷாஜஹான் கவலைப்படவே இல்லை. வசூலாகிய வரிப் பணம் அனைத்தையும் கட்டடப் பணிகளுக்காகவே செலவழித்தார். தனக்குக்கீழிருக்கும் அரசர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் அதிக வரிகேட்டு வற்புறுத்தினார்.
மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது. அவர்கள் தாஜ்மஹால் கட்டட வேலையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பேரரசின் பொருளாதார நிலை படுமோசமாகிப் பொனது.
ஆனால் ஷாஜஹானுக்கு மக்கள் முக்கியமாகத் தெரியவில்லை. தன் மனைவிக்காகக் கட்டும் கட்டடம் மட்டுமே நினைவில் இருந்தது.
இது ஒளரங்கசீப்புக்குப் பிடிக்கவில்லை. மக்களைத் துன்புறுத்தி இப்படி ஒரு நினைவுச்சின்னம் தேவைதானா என்று நினைத்தார். ஆனால் அந்தச் சிறுவயதில் அவரால் பேரரசரை எதிர்த்துப் பேசக் கூட முடியவில்லை.
1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப்பணிகள் 1648-ல் தனர் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவயின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில் கண்ணீர் வடித்தார் ஷாஜஹான். அனால் மக்கள் வறுமையினால் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள். தாஜ்மஹாலுக்காக செலவிடப்பட்ட தொகை முப்பத்திஇரண்டு மில்லியன் என்று ஒரு தகவல் உண்டு. இல்லை, செலவுத் தொகையைக் கணக்கிடவே முடியாது என்று பல வரலாற்று அறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.
எளிமை விரும்பியான ஒளரங்கசீப்பின் கண்களுக்குத் தாஜ்மஹால் அழகாகத் தெரியவில்லை, துயரமாகவே தெரிந்தது.
மேலும் ஒரு தகவலைக் கேள்விப்பட்ட அவர் அதிர்ச்சியடைந்தார். ஷாஜஹானுக்கும் தாராவுக்கும் இடையே நடந்த உரையாடல் அது.
'என் அன்பு மனைவியின் ஆசைப்படி தாஜ்மஹாலைக் கட்டி எழுப்பிவிட்டேன். அதனை என் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டே இருப்பேன். இந்த ஆக்ராவை விட்டு நான் எங்கும் செல்லவே மாட்டேன். ஆனால் இறப்புக்குப்பின் என்ன செய்வேன்?'
'வேதனைப்படாதீர்கள் தந்தையே! தங்கள் ஆசை என்னவென்று கூறுங்கள். நிறைவேற்றுகிறேன்.'
'மும்தாஜூக்காக இந்த வெள்ளைக்கல் மாளிகை. என் மரணத்திற்குப்பின் அவள் அருகிலேயே நிரந்தரமாக ஓய்வெடுக்குமாறு, ஒரு கருப்புக்கல் மாளிகையை எனக்காக உருவாக்க ஆசைப்படுகிறேன். நிறைவேற்றுவாயா தாரா?'
'நிச்சயமாகத் தந்தையே! உங்கள் ஆசையை நிறைவேற்றுவதே என் லட்சியம்.'
ஒரு தாஜ்மஹால் கட்டியதாலேயே ஏராளமான இழப்புகள். இன்னொரு கறுப்புக்கல் மாளிகை கட்டினால்? ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை உண்டாக்கியது.
இஸ்லாமிய நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர் ஒளரங்கசீப். ஆனால் தாரா, அக்பரது கொள்கையைக் கொண்டிருந்தார். எல்லா மதத்தினரையும் ஆதரித்தார். முக்கியமாக ஹிந்து மதநூல்களை எல்லாம் படித்தார். உபநிஷதங்களை மொழிப்பெயர்த்து, சரி-உல்-அஸ்ரார் என்று பெயரிட்டார்.
தாராவின் செயல்களுக்கு ஷாஜஹான் ஆதரவளித்துவந்தார். ஆனால் ஒளரங்கசீப்பின் பார்வையில் அவை மதவிரோதக் காரியங்களாகத் தெரிந்தன. இதுபோன்ற பல விஷயங்கள் ஒளரங்கசீப்புக்கும் ஷாஜஹானுக்குமிடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியது. தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்குமிடையே தீராத பகையை தோற்றுவித்தன.

1. முற்றுகை

ஆக்ரா கோட்டை. உள்ளுக்குள்ளேயே நிறையக் கிணறுகள் இருந்தன. எல்லாம் வற்றாதவைதான். இருந்தாலும் எந்தக்கிணற்று நீரும் குடிப்பதற்பகுரிய சுவையில் இல்லை.

சாதாரண மக்கள் வேண்டுமானால் குடிப்பதற்கு லாயக்கற்ற நீரைக்குடிக்கலாம். பேரரசரால் முடியுமா?

அதுதான் அருகிலேயே சலசலத்து ஓடுகிறதே யமுனை. எவ்வளவு அழகான நதி! அற்புதமான சுவை கொண்ட நீர். முகலாய பேரரசர் ஷா ஜகான் குடிப்பதற்காகவே, ஆக்ரா கோட்டைக்குள் யமுனை நீர் செல்லும்படியான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வசதிதான் ஒளரங்கசீப்புக்கு ஒரு வசதியான திட்டத்திற்கு வழி வகுத்துக்கொடுத்தது. கோட்டைக்குள் செல்லும் குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

இவ்வளவு தூரம் படையெடுத்து வந்து, எதிரிகளையெல்லாம் வீழ்த்தி, ஆக்ரா கோட்டையைச் சூழ்ந்தாயிற்று. ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை. மிகப்பெரிய, பாதுகாப்பான மதில் சுவர்கள். கோட்டைக்குள்தான் பேரரசர் ஷா ஜகான் இருக்கிறார். வயதான மனிதர். உடல்நிலை வேறு சரியில்லை.

அதனால் என்ன? உள்ளிருக்கும் ஆயிரத்து சொச்சம் வீரர்கள், எந்த நிலையிலும் எதிர்த் தாக்குதல் நடத்த தயாராகவே இருந்தார்கள். கோட்டைச் சுவரை பீரங்கிக்குண்டுகளால் துளைத்து உள்ளே நுழைவதெல்லாம் மிகவும் கடினமான காரியம். வாரக்கணக்கில் ஆகிவிடும். அதற்குள் வேறு எதிரிகள் யாராவது கிளம்பி வந்துவிட்டால், அவர்களோடு சண்டை போட வேண்டியதிருக்கும். தாமதமே கூடாது. இவ்வளவு நாட்கள் பட்ட கஷ்டங்களுக்குக்கெல்லாம் பலன் கிடைக்காமல் போய்விடக்கூடாது. ஆக்ரா கோட்டையைக் கைப்பற்றியே ஆக வேண்டும்.

எப்படி என்று யோசித்தபோதுதான், ஒளரங்கசீப்புக்கு குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் யோசனை உதித்தது. மூன்று நாட்கள் கழிந்தன. உள்ளே பேரரசர் ஷா ஜகானுக்கு மிகவும் கஷ்டமாகப் போயிற்று.

'தந்தையை இப்படியா கொடுமைப்படுத்துவாய்? தண்ணீரின்றித் தவிக்க விட்டிருக்கிறாயே?'
வெளியே நின்றிருக்கும் தன் மகன் ஒளரங்கசீப்புக்கு இப்படி ஒரு கடிதத்தை அனுப்பினார்.

'இதில் என் தவறு ஏதுமில்லை. உங்களுடைய இந்த நிலைக்குக் காரணம் நீங்களேதான்' - என்று பதில்கடிதம் அனுப்பினார் ஒளரங்கசீப். இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்றுணர்ந்த ஷாஜகான், தன் தளபதி பாசில்கானைத் தூது அனுப்பினார்.

'பேரரசர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்' என்று பாசில்கான், ஒளரங்கசீப்பினடம் கூறினார்.

'எனக்கும் அதில் விருப்பம் உண்டு. என் தந்தை மேல் நான் கொண்டுள்ள பாசம் என்பது யாராலும் புரிந்துக்கொள்ள இயலாதது. ஆனால் நான் அவரைச் சந்திக்க வேண்டுமெனில் அவர் சில விஷயங்களைச் செய்தே ஆக வேண்டும். எனது வீரர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவேண்டும். அதற்குப் பின்னரே நான் அவரைச் சந்திக்க வருவேன். என்னால் அவருக்கு எந்த தீங்கும் நேராது. இதை உங்கள் பேரரசரிடம் சொல்லுங்கள்.'

ஒளரங்கசீப்பின் பதிலைக் கேட்ட ஷா ஜகான், கோட்டைக் கதவுகளைத் திறிந்துவிட்டார் அது கி.பி. 1658, ஜூன் 8. ஒளரங்கசீப்பின் முதல் மகன் சுல்தான் முகமது கோட்டையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தன் தாத்தா ஷாஜகானை உரிய மரியாதையோடு சென்று சந்திதார் முகமது.

இரண்டு நாட்கள் கழித்து, ஷா ஜகானின் செல்ல மகளும், இளவரசியுமான ஜஹனாராவிடமிருந்து ஒளரங்கசீப்பிக்கு ஒரு கடிதம் வந்தது.

'பேரரசின் பெரும்பகுதியை நீயே எடுத்துக்கொள். ஆட்சி செய். நீ முடி சூட்டிக் கொள்வதில் நம் தந்தைக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அனால் உன் சகோதரர்களுக்குச் சேர வேண்டிய சில பகுதிகளை மட்டும் விட்டுக்கொடுத்துவிடு. இது சம்பந்தமாகத் தந்தை உன்னிடம் நேரடியாகப் பேச விரும்புகிறார். அதுதான் நீ அவருக்குச் செய்யும் மரியாதை.'

ஒளரங்கசீப் தன் சகோதரியின் வார்த்தைகளை மதித்தார். கண்டிப்பாகச் சந்திக்க வருவதாகச் சொல்லி பதில் அனுப்பினார். தன் படையினருடன் கிளம்பி, ஆக்ரா கோட்டைக்குப் பேரணியாகச் சென்று சந்திக்லாம் என்று கிளம்பினார். அந்த நேரத்தில் ஒளரங்கசீப்பின் இளைய சகோதரி ரோஷனாரா அங்கு வந்தார். அவருக்கு ஒளரங்கசீப் மேல் தனிப்பாசம் உண்டு.

'எங்கே புறப்பட்டு விட்டாய் சகோதரா?'

கடிதத்தைக் காண்பித்தார் ஒளரங்கசீப்.

'எனக்கு எல்லாம் தெரியும். இது சம்பந்தமாக உன்னை எச்சரித்துவிட்டுப் போகத்தான் வந்தேன். தந்தை உன்னைக் காண பாசத்துடன் காத்திருக்கிறார் என்றா நினைக்கிறாய்?'

'பின் வேறு என்ன? இந்த வயதான காலத்தில் அவரால் என்னை என்ன செய்துவிட முடியும்?'

'நீ தப்புக்கணக்குப் போடுகிறாய் சகோதரா. உன்னை ஆக்ரா கோட்டைக்குள் அழைத்து, பேசுவதுபோல நடித்து அங்குள்ள பலம் வாய்ந்த பெண்களால் தாக்கிக் கொலை செய்வதாகத் திட்டம். இந்தக் கடிதத்தை அனுப்பியது ஜஹனரா தானே. உன் மீது கொஞ்சம்கூடப் பாசம் இல்லாத அவளது வார்த்தைகளை நீ எப்படி நம்பினாய்?'

ஒளரங்கசீப்பின் மனம் கொதித்தது. உடனடியாகத் தன் தளபதியை அழைத்து ஓர் உத்தரவிட்டார்.

'ஷா-இன்-ஷாவை இப்போதே கைது செய்யுங்கள். யாருடனும் அவருக்குப் பேச அனுமதி கிடையாது. என் உத்தரவின்றி யாரும் அவரைச் சந்திக்கக்கூடாது. ஆனால்ஒரு பேரரசருக்குறிய மரியாதை எந்தவிதத்திலும் குறயைக்கூடாது. எல்லா வசதிகளுடனும் அவர் இருக்கின்ற இடத்திலேயே சுதந்திரமாக வாழலாம். அவருடைய முதல் மகள் ஜஹானாராவை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பினால், அனுமதிக்கவும்.'

ஒளரங்கசீப்பின் கட்டளை செயல்படுத்தப்பட்டது. ஷா ஜஹான் தன் இறுதி நாள்களை ஆக்ரா கோட்டையில், அரண்மனைக் கைதியாகக் கழித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் (1666) பிறகு இறந்துப் போனார்.

அந்தச்சமயத்தில் ஒளரங்கசீப் ஆக்ராவில் இல்லை. ஆனால் தன் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி அறிந்த உடனேயே தன் மகன்களளை ஆக்ராவுக்கு அனுப்பினார்.

ஷா ஜகான் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி உரிய மரியாதைகள் செய்யப்பட்டன. சந்தனமரப் பெட்டியில் வைக்கப்பட்டு, படகில் ஏற்றப்பட்ட உடல், யமுனை நதியில் பயணம் செய்து, தாஜ்மஹாலை அடைந்தது.

அவரது அன்பு மனைவி மும்தாஜின் நினைவிடத்துக்குப் பக்கத்திலேயே, ஷா ஜஹானின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஒளரங்கசீப் பொல்லாதவர். கெட்டவர். இரக்கக் குணமே இல்லாதவர். மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர். ஹிந்துக் கோயில்களை இடித்தவர். தன் தந்தையை வயதான காலத்தில் சிறையில் வைத்துக் கொடுமைப்படுத்தினார். ஒளரங்கசீப்பால் தான் முகலாயப் பேரரசே முடிவுக்கு வந்தது.
முகலாய வம்சத்தின் கடைசிப் பேரரசர் ஒளரங்கசீப் பற்றி நம் பாடப்புத்தகங்கள் சொல்லும் விஷயங்கள் இப்படி எதிர்மறையாகத்தான் இருக்கின்றன.

இதில் எவ்வளவு சதவிகிதம் உண்மை இருக்கிறது?

ஷாஜகானின் கடைசிக் காலத்தில் ஒளரங்கசீப் அவரைக் கெளரவமாக அரண்மனைச் சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமையெல்லாம் படுத்தவில்லை என்று பர்த்தோம். ஷாஜகானின் உடலகூட உரிய மரியாதைகளுடனேயே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும் அவரது பிரியத்துக்குரிய தாஜ்மஹாலில், மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே.
பின் ஏன் இப்படி முரண்பாடுகள்? ஒளரங்கசீப்பை, ஷாஜகான் வெறுத்தது ஏன்? சொந்த மகனையே கொலை செய்யத் திட்டமிடக் காரணம்? தன் தந்தை மீதே ஒளரங்கசீப் படையெடுக்கக் காரணம்? தன் சகோதரர்களை எல்லாம் கொன்றுவிட்டு, பேரரசராகத் தன்னை ஆக்கிக்கொண்டதன் பின்னணி? வாழ்க்கை முழுவதையும் புன்னகை என்ற ஒன்றை மறந்து, இறுக்கத்துடனேயே கழித்தாரே, ஏன்?பார்க்கலாம். சரித்திரத்தில் முற்றிலும் தவறாகச் சித்தரிக்கப்பட்ட முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் பற்றிச் சரியாக புரிந்துகொள்ளலாம்.

Tuesday, January 13, 2009

புத்தகம் பற்றி...

ஒளரங்கசீப் மிகவும் பொல்லாதவர், தன் தந்தையையே சிறை வைத்தவர், மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்லிக் தந்திருக்கிறது. அவரது உண்மை முகமே வேறு!

தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். அடிப்படையில் மிகுந்த நேர்மையாளர்.

இளம் வயதில் தந்தை ஷாஜஹானால் எக்காரணத்தினாலோ மிகவும் புறக்கணிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். அதுவே பின்னாளில் தந்தை மகனுக்கு இடையே ஒரு பெரிய பிளவை உண்டாக்கிவிட்டது.

தந்தையையும் சகோதரர்களையும் வென்று டெல்லி அரியணையைக் கைப்பற்றி, மாபெரும் சக்ரவர்த்தியான ஒளரங்கசீப்பின் வாழ்வில் தான் எத்தனை சுவாரசியமான திருப்பங்கள்!

இந்நூலைப் படித்தபின் ஒளரஙகசீப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் முற்றிலும் மாறி இருக்கும் என்பது நிச்சயம்.

நன்றி: ஆசிரியருக்கு மற்றும் இந்த புத்தக வெளியீட்டாளர்களுக்கும்.

முன்னுரை

சக்ரவர்த்தி என்கிற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் ஒளரங்கசீப் தான். ஆனால் சரித்திரப் பாடநூல்கள் ஒளரங்கசிப்பை மிகத் தவறாகவே அறிமுகப்படுத்துகின்றன. உண்மையில் ஒளரங்கசீப் எப்படிப்பட்டவர்? அவருடைய ஆட்சி எப்படி இருந்தது? வியப்பூட்டும் உண்மைத் தகவல்களைப் படியுங்கள்.
ஆசிரியர் - முகில்
புத்தகத் தலைப்பு - ஒளரங்கசீப்
நன்றி ஆசிரியருக்கு மற்றும் இந்த புத்தக வெளியீட்டாளர்களுக்கும்.