Tuesday, January 20, 2009

8. ஆட்சி எப்படிப்பட்டது?

'ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு'.

ஒளரங்கசீப்பின் லட்சியமாக இருந்தது இதுதான். இந்தியா முழுவதும் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும். இஸ்லாமியச் சட்டப்படி (ஷரீயத்) ஆட்சி நடத்த வேண்டும் என்பதே ஒளரங்கசீப்பின் எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காககத் தான் போராடிக்கொண்டிருந்தார்.

தன் லட்சியத்தை நிறைவேற்ற ஒளரங்கசீப் பிற மதத்தினர்களைக் கொடுமைப்படுத்தினார். ஹிந்துக்கள் மீது அதிக வரிகளை விதித்தார், அவர் ஆட்சியில் இஸ்லாமியர்களைத் தவிர மற்ற மதத்தினர் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர், அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவருடைய ஆட்சியில் தான் ஏராளமான ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இவையெல்லாம் ஒளரங்கசீப் ஆட்சிக் காலம் பற்றிப் பொதுவாகக் கூறப்படும் செய்திகள்.

ஒளரங்கசீப் ஆட்சியில் சில புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும், நடைமுறையில் இருந்த சில வரிகள் நீக்கப்பட்டன என்பதே உண்மை.

ஹிந்துக்கள் தீபாவளியின் போது வீடுகளில், வீதிகளில், கோயில்களில் வரிசையாக விளக்குகளை ஏற்றுவர். அதே போல, முஹர்ரம் பண்டிகையின் போது தீபங்கள் ஏற்றுவது முஸ்லீம்களின் வழக்கமாக இருந்து வந்தது. இந்த தீப அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்றால், தனியாக வரி செலுத்த வேண்டியிருந்தது. ஒளரங்கசீப் அதை ரத்துசெய்தார்.

கங்கை என்பது, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் நதி. அதில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. ஆனால் முகலாயர்கள் ஆட்சியில், கங்கை நதியில் ஹிந்துக்கள் நீராட வரி செலுத்த வேண்டியதிருந்தது. ஒளரங்கசீப் அந்த வரி தேவையில்லை, யார் வேண்டுமானாலும் கங்கையில் நீராடலாம் என்று அறிவித்தார்.

இற்ந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதென்பது ஹிந்துக்களின் சடங்குகளில் ஒன்று. அதற்கும் தனியாக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த வரியும் ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டது.

நதிகளில் மீன்கள் பிடிப்பதற்குக்கூட வரி இருந்தது. பால் கறந்து விற்பதற்கும் வரி, பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரி, காய்கறிகள் விற்பதற்கும் வரி எல்லாமே ஒளரங்கசீப் காலத்தில் நீக்கப்பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி, காய வைத்தால் அது வரட்டியாகிவிடும். அதை அடுப்பெரிப்பதற்கும், இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்படுத்தி வந்தன். ஆனால் அந்த வரட்டியை உபயோகிப்பதற்குக் கூட தனியாக வரிவிதிக்கப்பட்டிருந்தது. அதுவும் நீக்கப்பட்டது.

இவைப் போக ஒடுக்கப்பட்ட ஹிந்து விதவைப் பெண்களை மறுமணம் செ;துக் கொள்பவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. அதை மாற்றினார் ஒளரங்கசீப். ஹிந்து பண்டிகைகளின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சந்தைகள் போடுவது வழக்கம். அதற்கு வியாபாரிகள் செலுத்த வேண்டிய வரி, ரத்து செய்யப்பட்டது.

இஸ்லாமியப் பேரரசின் கீழ் வாழும் இஸ்லாமியர் அல்லாத மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி, ஜிஸ்யா (Jizya). அதாவது தங்கள் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர் அல்லாத மக்கள் ஜிஸ்யா வரியை செலுத்திவந்தனர். அக்பர் தவிர பிற முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்த ஜிஸ்யா வரி வழக்கத்தில் இருந்தது. அரசின் பாதுகாப்புச் செலவுக்காக வாங்கப்பட்ட இந்த வரியிலிருந்து, முதியோர், பிச்சைக்காரரர்கள், ஊனமுற்றோர், துறவிகள், கிருஸ்தவ குருமார்கள, அந்தணர்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1679-ல் ஒளரங்கசீப் தன் தன் பேரரசு முழுவதும் ஜிஸ்யா வரியினை கொண்டுவந்தார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய பிற மதத்தினர்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை.

வரியைத் தவணை முறையில் செலுத்த மக்கள் அனுமதிக்ப்பட்டனர். பணமாக அன்றி, பொருளாகக் கூட செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. மிகவும் கஷ்டத்தில் இருப்பவருக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் இஸ்லாமியர்கள் ராணுவத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர். 'ராணுவத்தில் சேராமல் வரிகட்டிக்கொள்கிறேன்' என்று கேட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பொதுநிர்வாகம், ராணுவத்தில் பதவிகள் ரேங்க் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மன்ஸப்தாரி முறை என்று அழைக்கப்பட்ட இது பழைய டெல்லி சுல்தான்களும் மங்கோலியர்களும் பின்பற்றி வந்ததாகும். ரேங்க் என்பது 10 முதல் 5000 வரை இருந்தது. 10 என்பது மிகவும் சாதாரண நிலை. 5000 மிகவும் உயரிய பதவிக்குரிய ரேங்க். இந்த ரேங்க் பட்டியலில் வருபவர்கள் மன்ஸப்தார்ஸ் என்று அழைக்கப்பட்டனர். பாபர், அக்பர் காலத்தில் இருந்தே இந்த மனஸப்தாரி முறை கடைபிடிக்கப்பட்டது.

எந்த ரேங்க் கொண்டவரும் நேரடியாக மன்னரின் கீழ் பணியாற்றுபவர்களாகத்தான் அர்த்தம். 5000 ரேங்க் கொண்ட ஒரு மன்ஸப்தார், 1000 ரேங்க கொண்ட இன்னொரு மன்ஸப்தாரை அதிகாரம் செய்ய முடியாது.

இந்த மனஸப்தாரி முறையில் அக்பர் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். முக்கியமாக, ரேங்க் 5000 என்பதை 7000 வரை உயர்த்தினார். ஒளரங்கசீப்பும் அதைக் கடைபிடித்தார். ஒளரங்கசீப் நியமித்தவர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஹிந்து மன்ஸப்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகவும் அதிகமான பகுதிகளை ஆண்ட ஒரே முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் தான். அவர் காலத்தில் தெற்கே தமிழகத்தின் செஞ்சியிலிருந்து* வடக்கே காஷ்மீர் வரையலும் மேற்கே ஆஃப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் முகலாயர்கள் வசம் இருந்தது. கொவா மட்டும் போர்த்துகீசியர்களிடம் இருந்தது.
------------------------------------------------------------------------------------------
* தெற்கே தக்காணபபகுதிகளை எல்லாம் தாண்டி, தமிழகத்துக்குள்ளும் முகலாயப்பேரரசு வேர்விட்டது. சுல்பிகார் கான் என்பவர் ஒளரங்கசீப்பின் தளபதிகளுள் முக்கியமானவர் தக்காணப் போர்கள் பலவற்றில் வெற்றிகரமாக செயல்பட்டவர்.
------------------------------------------------------------------------------------------
அவர் முகலாயப்படைகளோடு தெற்கு நோக்கி மேலும் மேலும் முன்னேறினார். 1690-ல் செஞ்சிக்கு வந்தார். கோட்டை முற்றுகையிடப்பட்டது. 1698-ல் செஞ்சிக் கோட்டை முகலாயர்கள் வசமானது. அதன் பெயர் நஸரஜ்கட்டா என்று பெயர் மாற்றிவைக்கப்பட்டது.

அதற்குப்பின் ரஜபுத்திர தளபதியான 'சொரூப்சிங்', செஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அத்தனை பெரிய பேரரசரை ஒற்றையாளாக நிர்வகிப்பதென்பது எவ்வளவு பெரிய காரியம். டெல்லியிலோ, ஆக்ராவிலோ இருந்துக்கொண்டே செயல்படுவது சரிபடாது என்று உணர்ந்த ஒளரங்கசீப், பெரும்பாலும் தக்காணப்பகுதிகளில் தன் இருப்பை அமைத்துக்கொண்டார். அதனால் அவர் காலம் வரையிலும் நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் எல்லாம் உண்டாகவில்லை.

பல சமயங்களில் அவரது மகன்களே, ஒளரங்கசிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோல்கொண்டா அரசரோடு நேர்ந்து சதி நடவiடிக்கைகளில் ஈடுபட்ட தன் மகனைப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தவர் ஒளரங்கசிப். பிற மகன்களும் அவ்வப்போது, இம்மாதிரி தண்டனைகளை அனுபவித்திருக்கின்றனர்.

பாபர் காலத்தில் ஆரம்பித்த போர்கள். முகலாயர்களின் எல்லையை விரிவாக்க எத்தனை உயிர்ப் பலிகள். கிட்டதட்ட இந்தியாவே தன் கையில் என்ற நிலையில் அதனைக் கட்டிக் காக்க வேண்டாமா? எவ்வளவு பெரியபொறுப்பு அது. அதனால் தான் நிhவாகத்தில் கடுமையாகவே நடந்துக் கொண்டார் ஒளரங்கசீப்.

பேரரசின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று ஹிந்து கோயில்கள் சம்பந்தப்பட்டது.

'முகலாயப்பேரரசின் ஆளுகைக்குள்பட்ட புராதானக் கோயில்கள் எவற்றையும் அழிக்கக்கூடாது. அதே சமயத்தில் புதிய கோயில்கள் எதையும் இனி கட்டவும் அனுமதி கிடையாது.'

இது தான் ஒளரங்கசீப் போட்ட உத்தரவு தவிர, ஏற்கெனவே இருந்த கோயில்களை இடிக்கச் சொல்லி அவர் கட்டளையிட்டது கிடையாது. ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமை ஒளரங்கசீப் காலத்தில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

சை சமயத்தை பரப்பியவர்களில் குமரகுருபரர் முக்கியமானவர். அவர் ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர் தான் (1625 - 1688). வட இந்தியாவில் சைவ சமயத்தை பரப்பியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு.

குமர குருபரர், காசியில் சைவ மடாலயலங்களை அமைப்பதற்காக, ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே போல, பலவேறு கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியதற்கான குறிப்புகளும் இருக்கின்றன.

காசியில் விஸ்வநாதர் கோயிலை ஒளரங்கசிப் இடிக்கச்சொல்லி உத்திரவிட்டார். அக்கோயில் இடிக்கப்பட்டது. அதற்கு காரணமாக கூறப்படும் சம்பவம் இதுதான். ஒரு ஹிந்து ராஜாவின் ராணிகள், காசியில் குளிக்க வந்தனர். அந்த ராணிகளுள் ஒருவர், கோயிலில் வைத்து அவமானப்படுத்தப்பட்டார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக மற்ற ஹிந்து ராஜாக்கள் முறையிட்டனர். விஸ்வநாத விக்கிரகம் அங்கிருந்து அகற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

கோயில் மட்டுமல்ல, கோல்கொண்டாவில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் கூறுவார்கள். கோல்கொண்டா மன்னன், தானஷா, பல ஆண்டுகள் வரியெதுவும் கட்டாமல், அந்த பணத்தை புதைத்து மசூதி ஒன்றைக் கட்டிவிட்டான். கோபமடைந்த ஒளரங்கசீப், மசூதியை இடிக்கச்சொன்னார். பணம் மீட்கப்பட்டது.

மற்றபடி ஒளரங்கசீப் ஆட்சியில் கட்டாய மத மாற்றங்கள் இருந்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை. தன்னிடம் சரணடைந்த சிற்றரசர்களை மதம் மாறச் சொல்லியெல்லாம் கட்டாயப்படுத்தவும் இல்லை.

ஆடம்பரத்தை விரும்பாத மனிதர் அவர். ஒரு பேரரசராக இருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்தவர். அவ்வளவு செலவு செய்து தன் தந்தை, தாய்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர்., இன்னொரு கருஞ்சலவைக் கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளைத் தடுத்தவர். இருந்தாலும் ஒளரங்கசீப் சில முக்கியமான சின்னங்களை கட்டினார்.

லாஹூரில் பாட்ஷாய் மஸ்ஜித் (Bhadshai Masjidh) என்ற மிகப் பெரிய மசூதியைக் கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டுத்தளத்தை கொண்டது இந்த மசூதி.

டெல்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் (Moti Masjidh) என்ற சிறிய மஸ்ஜித் ஒன்றையும் கட்டினார்.

லாஹூர் கோட்டையைச் சுற்றியிருக்கும் பதிமூன்று நுழைவாயில்களில் ஒன்றான 'ஆலம் கீர்' என்ற பிரமாண்டமான கட்டடம் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.
எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான் ஒளரங்கசீப்பால் முகலாயப்பேரரசை கட்டிக்காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.

No comments: